ஆகாயத்திலும் அரங்கேறும் சில்மிஷ அத்துமீறல்கள்- விமான பணிப்பெண்ணை அருகில் அமரசொல்லி அடம்பிடித்த 2 வெளிநாட்டினர்

மானம் கப்பலில் போய்விட்டது என்று சொல்வதுண்டு. இப்போது பலரது மானம் விமானத்தில் போகிறது… விமானத்தில் பறப்பவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களும் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வார்களா என்று சாமானிய மக்கள் ஆச்சரியப்படும் வகையில் ஆகாயத்திலும் சில்மிஷ அத்துமீறல்கள் நடைபெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தில் முன் இருக்கையில் இருந்த பெண்ணின் இடுப்பை பின் இருக்கையில் இருந்து கிள்ளிய கேரள மந்திரியின் பதவியே காலியானது. பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சங்கர் மிஷ்ரா நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டது. 3 மாதங்களுக்கு பிறகு வெளிவந்து அவரை உள்ளே தள்ளியிருக்கிறது.

மனிதர் இப்படியா இருப்பார்? பெண் பயணி அருகில் சென்று பேன்ட் ஜிப்பை கழட்டி மூத்திரம் பெய்து இருக்கிறார். ஆடையெல்லாம் நனைந்து போன அந்த பெண் விமான பணிப்பெண்கள் உதவியுடன் சுத்தப்படுத்தி மாற்று உடை அணிந்து பயணித்து இருக்கிறார். பயணிகளின் இந்த மாதிரி அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவா மாநிலம் மோபாவில் சமீபத்தில் புதிதாக சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.

பயணிகள் மத்தியில் தோன்றி விமான பணிப்பெண்கள் விமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி என்று பாதுகாப்பு ஒத்திகைகளை செய்கைகள் மூலம் செய்து காட்டி கொண்டிருந்தார். அப்போது ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்த 2 ரஷிய நாட்டு பயணிகள் அந்த பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களது பார்வையும், சைகைகளும் எல்லை மீறிக் கொண்டிருந்ததை சக பயணிகள் சிலரும் கவனித்து கொண்டிருந்தார்கள். திடீரென்று விமான பணிப்பெண்ணை பார்த்து ‘வா… என் அருகே வந்து உட்கார்’ என்று அழைத்தனர்.

ஆனாலும் பாராமுகமாக இருந்த அந்த பெண்ணை விட்டபாடில்லை. அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்த மற்ற பயணிகள் ‘இவர்களோடு பறப்பது சிரமம். இறக்குவதே நல்லது’ என்றனர். இதையடுத்து அந்த பயணிகள் இருவரையும் பிடித்து மத்திய பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் விமான பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button