30 வருட அரசியல் கட்டுக்களை அவிழ்த்த விஜய்க்கு சிவஞானம் சிறீதரன் வாழ்த்து..!

தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களாக இருந்த குடும்ப அரசியலை வேறூடன் எடுத்த தவெக கட்சியினருக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
புதுமுக அரசியல் கட்சிக்கு வாழ்த்துக்கள்
புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ளீர்கள். மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த ஆணையை, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
குறிப்பாக, ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாசைகள் குறித்த உங்களது தெளிவான நிலைப்பாட்டினை நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
தொப்புள்கொடி உறவுகளான எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும், உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னின்று ஒத்துழைப்பு வழங்கும் என ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தங்களின் புரட்சிகரமான புதிய பயணம் வெற்றியளிக்க இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()