தேர்தலுக்கான கூட்டு அல்ல; சித்தார்த்தன் கூறுகிறார்

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றாக இணைந்து அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக எங்களுக்குள்ளே ஒரு புரிந்துணர்வை கொண்டு வருவதற்காக இந்த கூட்டு ஏற்படுத்தப்பட்டதே தவிர இது ஒரு தேர்தல் கூட்டு அல்ல என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய கொழும்பு சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று பதிலளித்த போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்,முஸ்லிம்,மலையக கட்சிகள் ஒன்றாக இணைந்து அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாக எங்களுக்குள்ளே ஒரு புரிந்துணர்வை கொண்டு வருவதற்காக இந்த கூட்டு ஏற்படுத்தப்பட்டது.
இது நிச்சயமாகத் தேர்தல் கூட்டணி அல்ல. இது முதலாவது கூட்டத்திலேயே சொல்லப்பட்டது. நாங்கள் சிறுபான்மை மக்களுடைய பிரச்சனைகளை ஆராய்ந்து, அது சம்பந்தமான நடவடிக்கைகள் எடுப்பதேயொழிய இது ஒரு தேர்தல் கூட்டணியாக அல்ல என்பதை மிகத் தெளிவாக எல்லோருமாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.- என்றார்.
![]()