டித்வா காலத்தில் பல உயிர்களைப் பறித்த பொறியியலாளர்களையும் தூக்கிலிட வேண்டும்; ரவூப் ஹக்கீம் எம்.பி.கடும் சீற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடமையை செய்யத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மரண தண்டனை விதித்தது போன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான பொறியியலாளர்களுக்கும் மரணதண்டனைவிதிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கொத்மலை அணை கட்டின் நீர் மட்டம் 700 மி.லி. அளவுக்கு 98.7 வீதம் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அணைக்கட்டை சுற்றியுள்ள அங்குள்ள மக்கள் மிகவும் பீதியில் இருக்கிறார்கள். அதேபோன்று நாவலப்பிட்டி நகரமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. டித்வா அனர்த்தத்தின்போதும் இந்த நிலையே காணப்பட்டது.
அத்துடன் 6,7ஆம் திகதிகளில் மீண்டுமொரு சூறாவளி ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அதனால் நிரந்தரமாக இந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க ஒரு பொறிமுறை தேவை. கெலிஓயா நகரம் இந்த முறையும் பல அடி உயரத்துக்கு நீரில் மூழ்கியது. அந்த இடங்களில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டப்படுவதே இதற்கு காரணம். அதனால் இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இங்கு மாத்திரமல்ல, நாவலப்பிட்டி நகரின் வடிகாலமைப்பு திட்டம் முற்றாக தோல்வியடைந்துள்ளது. கொத்மலை நீர் தேக்கத்தில் இருந்து, இந்தமுறை நீரைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டித்வா அனர்த்தத்தின் போது எந்தவித முன்னறிவிப்பும்விடுக்காமல் ஒரே தடவையில் நீரை திறந்துவிட்டதாலேயே , அன்று நாவலப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டன.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடமையை செய்யத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மரண தண்டனை விதித்தது போன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான பொறியியலாளர்களுக்கும் மரணதண்டனை விதிக்க வேண்டும் என்றார்.
![]()