இலங்கை

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, அசங்க நவரத்ன, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார மற்றும் மஹிந்த பதிரண ஆகியோர் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனநேற்று திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) குண்டுத் தாக்குதல் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், குறித்த ஆறு பேரும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவே மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்களை பரிசீலித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து குறித்த ஆறு பேரும் மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை பரப்பி வருவதால், அவை விசாரணைக்கு தடையாக உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பதிரண ஆகியோரே எனவும் CID நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

2024 ஆம் ஆண்டு இலக்கம் 8 சட்டத்தின் 3(1)(அ) பிரிவின் கீழ் உள்ள 1, 2, 3 ஆம் உட்பிரிவுகளின்படி இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், குறித்த ஆறு பேரும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

அத்துடன், 2026 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி முதல் இந்த விசாரணை தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட அனைத்து காணொளிகளின் திருத்தப்படாத (Unedited) மூலக் காட்சிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button