50,000 ஆண்டுகளில் முதல்முறையாகக் கண்முன் தோன்றும் வால்மீன்….
புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட வால்மீன் ஒன்று 50,000 ஆண்டுகளில் முதல்முறையாகக் கண்ணுக்குத் தெரியவிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் வாரங்களில் C/2022 E3 (ZTF) என்ற அந்த வால்மீன் சூரியனுக்கும் பூமிப்பந்துக்கும் இடையில் செல்லவிருக்கிறது. அப்போது அதைக் காணலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சென்ற மார்ச் மாதத்தில் அது வியாழன் கிரகத்தைத் தாண்டிச் செல்லும்போது ஆய்வாளர்கள் அதைக் கண்டுபிடித்தனர்.
நீண்ட காலமாகச் சூரிய அமைப்பின் தொலைதூரத்தில் இருக்கும் பகுதிகளைச் சுற்றிச்சுற்றிச் சென்றிருக்கும் அந்த வால்மீன், ஜனவரி 12ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் செல்லும். பிறகு அடுத்த மாதம் முதலாம் தேதி (1 பிப்ரவரி) அது பூமிக்கு மிக அருகில் வரும்.
தொலைநோக்குக் கண்ணாடியின் உதவியோடு அல்லது நேரடியாக அதைக் காணலாம்.
குறிப்பாக, நிறைய நகரவிளக்குகள் இல்லாத இடங்களில் அந்த வால்மீனை எளிதில் காணலாம் என்று கூறப்படுகிறது.
பனிக்கட்டி, தூசி ஆகியவற்றால் ஆனது அந்த வால்மீன். அதைச் சுற்றிப் பச்சை ஒளி வீசுவதுபோல் தெரியும் என்று அறிவியல் நிபுணர் ஒருவர் கூறினார்.
![]()