பழிவாங்கல்கள்,ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சியை தொடரும் அரசு

பழிவாங்கல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சியை கொண்டு செல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும், ஆனால் அவ்வாறான முயற்சிகள் பலனளிக்காது என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாற்றத்திற்காக மக்கள் அரசாங்கமொன்றை அமைத்துள்ளனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த நடந்த மாற்றம் நடந்ததா? 2015ஆம் ஆண்டிலும் இது போன்ற மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தனர். அப்போதும் பழிவாங்கல் செயற்பாடுகளையே முன்னெடுத்தனர். இப்போதும் அதே அரசாங்கம் போன்றே நடந்துகொள்கின்றது. ஒடுக்குமுறைகளை செய்து அச்சுறுத்தினால் தாம் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியுமென்று அரசாங்கம் நினைக்கின்றது. அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறாகும். எங்கேனும் முறைகேடு நடந்திருந்தால் அது தொடர்பில் முறையாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி செயற்படுத்தக்கூடாது.
ஒரே கையெழுத்திழுத்தில் அனைத்தையும் மாற்றுவோம் என்றவர்கள் இப்போது அரசி, உப்பையும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்கின்றனர். தமது முடியாமையை மூடி மறைக்க அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்தினால் அது தவறாகும் என்றார்.
![]()