கோத்தாவின் சாட்சியத்தை எந்த முறையில் பெறுவது?; ஜூனில் கட்டளை என்கிறது யாழ். நீதிமன்றம்

காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கில், கோத்தாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எத்தகைய முறையில் பெறுவது என்பது தொடர்பான கட்டளை ஜூன் மாதம் வழங்கப்படும் என்று யாழ்.நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்து.
இந்த வழக்கின் கட்டளை வழங்கப்படவிருந்தது. எனினும், கட்டளை ஜூன் மாதம் 2ஆம் திகதி வழங்கப்படும் என்று யாழ்.நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில், 2017ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது, கோத்தாபய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக தன்னால் யாழ்ப்பாணம் செல்லமுடியாது என்று கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.சாட்சியம் வழங்குவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாது என்றால், அது தொடர்பில் சத்தியக் கடதாசியும், எழுத்துமூல சமர்ப்பணமும் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
அவை கோத்தாபய தரப்பால் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கில், கோத்தாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எத்தகைய முறையில் பெறுவது என்பது தொடர்பான கட்டளையை நீதிமன்றம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()