நேரத்தை வீணடிக்கும் ஆளும் கட்சி எம்.பி.க்கள்; கஜேந்திரகுமார் எம்.பி. கடும் விசனம்

பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் போன்றவர்கள் ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள நிலையில் எல்லா விடயங்களையும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கதைத்துத் தான் தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அமைச்சருடன் நேரடியாகக் கதைத்துத் தீர்வுகளைப் பெற முடியும். அரைவாசிக்கு மேற்பட்டு நீங்களே கதைப்பதால் நேரம் வீணாக்கப்படுகிறது எனக் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்திக் குழுக் கூட்டமெனில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்கலாம். கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்கள் வழங்கப்படாவிடில் நீதிமன்றம் ஊடாக அல்லது வேறு முறைகள் மூலம் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்கு எங்களுக்கு உரிமையிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட நபர்கள் கூட்டத்தில் இல்லாமல் அவர்கள் தொடர்பில் கேவலமான வார்த்தைகள் பயன்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு கதைப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. அவ்வாறு இல்லாமல் இந்தக் கூட்டத்தில் வைத்துக் கேவலப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை, அமைச்சரே செய்ய வேண்டும் என்றார்.
![]()