உலகம்

போரால் மூடப்பட்ட வான்பரப்பு; வானில் வட்டமிட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கில் நிலவிய போர்ப் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு பயணிகள் விமானங்கள் வானில் சிக்கிய நிலையில், பின்னர் பாதுகாப்பாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தகவலின்படி, (15) காலை அந்த இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

(14) மாலை 5.10 மணிக்கு யூ.எல்.-229 (UL-229) விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், இரவு 6.36 மணிக்கு யூ.எல்.-253 (UL-253) விமானம் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தன.

A-321neo ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் மத்திய கிழக்கு வலயத்தை அண்மித்தபோது, ஈரானிலிருந்து தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால், குவைத் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்பரப்பை தற்காலிகமாக மூடியிருந்தன.

இதன் காரணமாக, குறித்த விமானங்கள் உடனடியாக இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டதுடன், கட்டுநாயக்கவிற்கு நேரடியாகத் திரும்புவதற்குப் போதிய எரிபொருள் இல்லாததால், அருகிலுள்ள பாதுகாப்பான வான்பரப்பில் சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வட்டமிட்டுப் பறந்தன.

பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, இரண்டு விமானங்களும் எந்தவித பாதிப்புமின்றி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இதேபோன்ற போர்ச் சூழல் காரணமாக, பல்வேறு சர்வதேச விமானங்களும் அந்தப் பகுதியில் தரையிறங்க முடியாமல் வானில் காத்திருந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button