இலங்கை

பாதாள உலகுடன், வெலிகம பிரதேச சபைத் தலைவருக்கு தொடர்பா?; கொலை மிரட்டல் விடுத்த கும்பல்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையுடன், பாதாள உலக குழு நடவடிக்கைகள் குறித்த பேச்சு மீண்டும் சமூகத்தில் எழுந்துள்ளது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல் பிரதேச சபைத் தலைவரின் அறைக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவத்துடன், பாதாள உலகக் கும்பல்களிடையேயான கொலைகள் குறித்து மீண்டும் சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

லசந்த விக்கிரமசேகர, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் தற்போது சிறையில் உள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டாவின் கும்பலின் தலைவர்களான ‘மிதிகம சூட்டி’ மற்றும் மிதிகம ருவானுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், மிதிகம ருவான் அந்தக் குழுவிலிருந்து பிரிந்ததன் பின்னர், அவரால் லசந்த விக்ரமசேகரவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறையில் இருக்கும் மிதிகம ருவான், அங்கிருந்து பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

”மாண்புமிகு தலைவரே, நீங்கள் இப்போது வெள்ளை நிறத்தை அணிந்துள்ளீர்கள். ​​நீங்கள் கருப்பு நிறத்தில் அணிந்திருந்த போது ​​நாங்கள் அனைவரும் ஒரே படகில் பயணித்தோம் என்பதை மறவாதீர்கள்.

பொய்யாக நாடகமாடி என் பையன்களில் எவரையேனும் சிறையில் அடைக்க முற்பட்டால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும் என மிரட்டல் விட்டு ஒரு பதிவை இட்டுள்ளார்.

அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட லசந்த விக்ரமசேகர கடந்த ஒகஸ்ட் 29 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்ததுடன் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

பல பெரிய பாதாள உலகக் கும்பல்கள் என்னை மிரட்டியுள்ளன. அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று கூறியதாக நம்பகமான தகவல் எனக்குக் கிடைத்துள்ளது என்பதை நான் அறிவேன்.

மிதிகமவைச் சேர்ந்த ருவான் என்கிற ருவான் ஜெயசேகர என்ற நபர் சமூக ஊடகங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் என்பதை நான் அறிந்தேன்.

இந்த சூழ்நிலைகள் அனைத்தினாலும் எனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக நான் உணர்கிறேன், மேலும் அந்த அச்சுறுத்தல்கள் இப்போது மிக வேகமாக அதிகரித்துள்ளதால், எனது உயிருக்கான பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த நேரத்தில் அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், தலைவர் பல்வேறு இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் கூட்டங்களுக்காக மட்டுமே வெலிகம பிரதேச சபைக்கு வருகை தந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் லசந்த விக்ரமசேகரின் கொலை மிதிகம ருவானின் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தவிசாளர், பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இன்று குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிகம பிரதேச சபை தவிசாளர் யார் என்ற தனிப்பட்ட காரணிக்கு அப்பால் பொலிஸாரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். விசாரணைகள் நிறைவடையும் வரை இந்தக் கொலை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது.

இவ்வாறான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரானாலும் அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

இந்நிலையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை தொடர்பாக தகவலறிந்த எவரும் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்றையதினம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கைத்துப்பாக்கியை பயன்படுத்தி நான்கு குண்டுகளை சுட்டு இந்த கொலையை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நீதி விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும்.

குறித்த படுகொலை அரசியல் காரணத்திற்காக நடந்ததா அல்லது தனிநபர் காரணத்திற்காக நடந்ததா என்பது விசாரணையை பாதிக்காது. எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி சிசிரிவியில் பதிவாகிய நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது.

வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார்.

இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ள காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *