உலகம்

பாகிஸ்தானில் பலூச் கட்சியின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  அக்கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது.

அந்தப் பேரணி முடிவடைந்து, பங்கேற்பாளர்கள் அனைவரும் அங்குள்ள ஷாஹ்வானி திடலில் திரண்டுள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சுமார் 14 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தாக்குதலானது பலூசிஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் அக்தர் மெங்கல் என்பவரை குறிவைத்து நடத்தப்பட்டு இருக்கலாம் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, பாகிஸ்தானின் மிகப் பெரிய வளம் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானின் மக்கள் நீண்டகாலமாக அவர்கள் மீதான வன்முறைகளினால், அம்மாகாணத்தைத் தனிநாடாக உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் போராடி வருகின்றனர்.

சமீபத்தில், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களான சர்தார் அக்தர் மெங்கல் மற்றும் மஹ்ராங் பலூச் ஆகியோருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *