இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நிலைமாறுகால நீதி வழங்கப்பட வேண்டும்- கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் கோரிக்கை..!

நிலைமாறுகால நீதியின் மூலம் வலிந்து காணமலாக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் அவர்களின் உறவுகளுக்கு நீதியை துரிதப்படுத்துமாறு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரகடன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழர்களின் உரிமை. மனித நேயம் கொண்டவர்களின் பங்கேற்பும் ஆதரவும் அதற்கான பாதுகாப்பு கவச மட்டுமல்ல அது தமிழர்களின் வாழ்வியல் போராட்டத்திற்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மூலம் தேடும் நீதிக்கான போராட்டத்திற்குமான பெரும் சக்தியாகும்.

இதனை தடுப்பதற்கோ விமர்சிப்பதற்கோ எவருக்கும் உரிமை இல்லை. காரண விளைவுகளின் கருத்தியல் அடிப்படையில் தமிழர்களின்விடுதலைக்கான போராட்டம் நீதியானது.

பிரித்தானிய வல்லரசின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட இலங்கை அரசு கொள்கை அடிப்படையில் பாகுபாடுகள் நிறைந்தது. இதனால் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டனர். துன்பியலுக்குள் தள்ளப்பட்டனர். சிங்களர்களை தவிர்த்து ஏனைய இனத்தவர்களை இனம் காரணமாக பல்வேறு அடக்கு முறைகளுக்குள் தள்ளுவது என்பது நாட்டின் நியதிச் சட்டமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

விசேடமாக சிங்களவர்களுக்குப் போன்று தமிழர்களுக்கும் அவர்களுக்கே உரிய தனித்துவமான தொன்மையான வரலாறும் இனத்துவ வரலாற்று பாரம்பரியங்களும் உண்டு.அதுமட்டுமல்ல வாழ்நிலமும் அந் நிலத்திற்கே உரிய மொழி, கலை, கலாசார மரபுகளுக்கும் அவர்கள் சொந்தக்காரர்களாவர். இத்தகைய கௌரவத்திற்குரிய தமிழர்களை சிங்கள பௌத்த பேரினவாத அரசும் அதன்காவலர்களான ஆட்சியாளர்களும் கட்டமைப்பு ரீதியில் அழித்தொழிக்கும் செயற்பாடுகளை பல தசாப்தங்களாக முன்னெடுப்பது நாட்டின் வரலாறாக தொடர்கிறது.

இன்று தம்மை பாதுகாப்பு கொள்வதற்காக அவர்களால் அறவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருமாறியதை நாம் விளங்கிக் கொள்கின்றோம்.

இந்நிலைக்கு இவர்களை தள்ளியது பேரினவாதம் என்பதோடு அதற்கான முழு பொறுப்பையும் பேரினவாத ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து வல்லரசுகளின் நோக்கத்திற்கு அடிபணிந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் உச்சகட்டமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாகும். இதற்கான நீதியை நிலைநாட்டாது அதனை மூடி மறைக்கவோ புதைக்கவோ இடமளிக்க முடியாது.அது மனுதர்மமும் அல்ல.

ஆயுத யுத்தம் முடிவுற்றதன் பின்னர் நடந்தது என்ன? தற்போதும் நடப்பது என்ன? ‘கடந்த காலத்தை மறப்போம். ஒற்றுமையாக முன்னோக்கி பயணிப்போம்’ எனும் போலி வார்த்தை ஜாலங்க ளுக்குள் நிலைமாறு கால நீதியை ஆழ குழி தோண்டி புதைக்க முயல்கின்றனர். விடுதலை இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத வல்லரசுகளின் வழிக்காட்டல் மற்றும் மே 18நினைவேந்தல் பிரகடனம் துணையோடுஅழித்ததோடு ஆயிரக்கணக்கான படையினரை தமிழர் பூமி எங்கும் நிலை நிறுத்தி வியாபிக்க செய்துள்ளமை தொடர் அழிப்பிற்கே. மேலும் திட்டமிட்ட வகையில் அரசு இளம் சந்ததியின் நோக்கி திறந்த பொருளாதார கொள்கையையும் நுகர்வு கலாச்சாரத்தையும் விரித்துள்ளது. இதன் மூலம் மக்களின் வாக்குகளை கொள்ளையிட்டு அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மூலம் தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து இனப்படுகொலையை வேகப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் ஆன்மீகம், அது தொடர்பான கலாச்சாரம், மக்களின் வலிமை என்பவற்றை சீரழித்து சிதைத்து தனது பேரினவாத இன அழிபிற்கு மாற்றம் எனும் கவர்ச்சி முலாம் பூசப்படுவதையும் நாம் அறிவோம்.

நாம் தற்போதைய அரசிற்கும் ஜனாதிபதிக்கும் கூறுவது

1. ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் உங்கள் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நீங்கள் தமிழர்களுக்கான நினைவேந்தல் உரிமையை மாற்று வழிகள் மூலம் தடுக்க நினைக்க வேண்டாம்.

2. சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனத்தவர்களுக்கு அரசியல் யாப்பின் மூலம் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் அவர்களின் இன ரீதியான தனித்துவங்களை மலினப் படுத்திக் கொண்டு தேசிய ஒற்றுமை தொடர்பாக கதைப்பதை விடுத்து தமிழர்களுக்கு தங்கள் அரசியலை தீர்மானிக்கும் உரிமை உள்ளது என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.

3. உடனடியாக நிலைமாறுகால நீதியின் மூலம் வலிந்து காணமலாக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் அவர்களின் உறவுகளுக்கு நீதியை துரிதப்படுத்தல் வேண்டும்.

4. தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாத தீர்வுகான வழிமுறைகளையும் அதற்கான செயற்பாட்டு திட்டங்களையும் இனியும் தொடர்வதில் காலத்தை வீணடிக்காது யுத்த குற்றங்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறையை ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

5. யுத்தக் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டாலும் தண்டிக்கப்படமாட்டார்கள் என ஆட்சியாளர்களும் ஜனாதிபதியும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனித தர்மத்திற்கும் எதிரானது என்பதை ஏற்றுக் கொள்ளலும் வேண்டும்.

6. சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் இராணுவத்தினரால் மட்டுமல்ல இவ் இராணுவத்தின் துணையோடு அதே கருத்தியல் கொண்ட பிக்குகளாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பினராலும் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை விடுவிக்க அவர்களை வெளியேற்றவும் வேண்டும்.

7. அரச திணைக்களங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்களை மீளப்பெறல் வேண்டும்.

8. கடந்த கால ஆட்சியாளர்களின் வழிநடத்தலின் கீழ் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டமையை அங்கீகரிக்க முடியாது என்பதோடு பௌத்த தர்மமும் அதனை ஏற்றுக் கொள்ளாது என்பதே உண்மை. ஆதலால் அதனை தமிழர்கள் விரும்பும் வகையில் மீள நிர்மாணம் செய்ய வழிவகுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *