இலங்கை

எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது

எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உப்பு பிரச்சினைக்கு தீர்வு காணாதவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே,
நாட்டு மக்கள் மரமுந்திரிகை சாப்பிடுவதை போன்று உப்பு சாப்பிடுவதில்லை என்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கிறது. உணவின் அடிப்படை பொருளாகவே உப்பு காணப்படுகிறது. ஆகவே உப்பு உற்பத்தியில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணுங்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ‘ நானும் இராணுவ வீரன் ‘ என்று குறிப்பிட்டுக் கொண்டு திரிந்தவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள்.
இராணுவத்தில் சேவையாற்றிய பலர் இன்று ஆளும் தரப்பில் உள்ளார்கள். பலர் பதில் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இராணுவ வீரர்களை வீரர்கள் என்று குறிப்பிடும் தற்றுணிபு இவர்களுக்கு கிடையாது. தேர்தலுக்கு முன்னர் இராணுவ வீரர்களை சிப்பாய் என்று குறிப்பிடவில்லை.
அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் போது அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள். எம்மை சிறைக்கு அனுப்பி அடிப்படை மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம்.
சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷர்கள் காரணம், கடந்த அரசாங்கம் காரணம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் குற்றஞ்சாட்டினீர்கள்.இனியும் இந்த குற்றச்சாட்டு செல்வாக்கு செலுத்தாது. ஏனெனில் 6 மாதங்கள் கடந்து விட்டன. ஆகவே போலியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துக் கொண்டிருக்காமல் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button