பேசாம “அதை” அனுப்பி வைங்க.. புடின் சரிப்பட்டு வருவார்.. டிரம்ப் “திகில்” ஐடியா!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு நெருக்குதல் கொடுத்து அவரைப் பணியச் செய்ய வேண்டும் என்றால், அமெரிக்கா உடனடியாக தனது அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யக் கடல் பகுதிக்கு அனுப்ப வேண்டும். நான் அதிபராக இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

உக்ரைன் போர் தொடர்பாக டிரம்ப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா களம் இறங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

அவர் (புடின்) அடிக்கடி அணு ஆயுதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார். தொடர்ந்து அதைக் கூறி வருகிறார். ரஷ்யா அணு ஆயுத நாடு என்று நாமும் பயந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் அவர்களை விட மிகப் பெரிய அணு ஆயுத சக்தி. உலகிலேயே மிகச் சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நம்மிடம் உள்ளன. மிகச் சிறந்த ஆயுதங்களை நாம் வைத்துள்ளோம்.

இன்னொரு தடவை அவர்கள் அணு ஆயுதம் என்ற வார்த்தையைப் பிரயோகித்தால், நாம் உடனடியாக நமது நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யக் கடல் பகுதிக்கு அனுப்ப வேண்டும். ரஷ்யக் கடல் பகுதி முழுவதும் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அவர்களை அசைய விடாமல் நெருக்குதல் கொடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கானோர் இப்படி அநியாயமாக செத்து மடிவதை நாம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார் அவர்.

அமெரிக்காவும் சரி, ரஷ்யாவும் சரி போர் வெறி பிடித்த நாடுகள்தான். இரு நாடுகளுமே அணு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பெருமளவில் குவித்து வைத்துள்ளன. உலகின் மிகப் பெரிய ஆயுத வியாபாரிகளும் கூட. ஒருவருக்கு ஒருவர் சண்டை மூட்டி, ஆயுதங்களை விற்று அதில் பிழைக்கும் நாடுகள்தான் இருவருமே. ஆனாலும் இந்த ஆயுத வியாபாரிகள் ஒரு போதும் நட்பாக இருந்தது இல்லை. இருவருமே நீண்ட கால எதிரிகள்தான். நேருக்கு நேர் மோதிக் கொள்ளாத வகையில் படு தெளிவாக ஆயுத விற்பனை செய்வதில் வல்லவர்களும் கூட. இன்று உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதும் நிலைக்கு வந்துள்ளன.

அமெரிக்காவிடம் தற்போது 14, ஓஹையோ அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் நீர்மூழ்கிக்கள் உள்ளன. மிகவும் அபாயகரமான அணு ஏவுகணைகள் இவை.

கடந்த பிப்ரவரி 27ம் தேதிதான் தனது நாட்டு அணு ஆயுதங்களை ஆயத்த நிலையில் வைக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதற்கு அப்போதே அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி கீத் கெலாக் பதிலடி கொடுத்திருந்தார். அமெரிக்கா உடனடியாக தனது அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்ய கடல் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். தற்போது அதே கருத்தை டிரம்ப்பும் பிரதிபலித்துள்ளார். கெலாக், டிரம்ப் அதிபராக இருந்தபோது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக திகழ்ந்தவர் என்பது நினைவிருக்கலாம்.

டிரம்ப் இப்படி அதிரடியாக பேசினாலும் கூட அதிபர் ஜோ பிடன் மிகவும் நிதானமாக செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் வேகம் காட்டியதோடு அப்படியே அடங்கி விட்டார். உக்ரைன் தனது வான்வெளியை No fly zone என்று நேட்டோ அமைப்பு அறிவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. அதை அமெரிக்கா இதுவரை ஏற்கவில்லை. அப்படி ஏற்றுக் கொண்டு அறிவித்தால், அது நேரடியாக அமெரிக்கா – ரஷியா இடையிலான போராக மாறி விடும் என்பதால் அமெரிக்கா அச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நடந்தால் அது பேய்க்கும் – பிசாசுக்கும் இடையிலான சண்டையாக மாறி ஒட்டு மொத்த உலகமும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் அபாயமும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button