சிறைக்குள் உருவான இயற்கை விவசாயம்… புதுச்சேரி சிறைக்கைதிகள் அசத்தல்!

புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள தண்டனை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், சிறைச்சாலைக்குள் இரண்டரை ஏக்கரில் கைதிகளின் உழைப்பால் உருவான ஒருங்கிணைந்த விவசாய பண்ணையை, சிறைத்துறை ஐஜி, மற்றும் அரசுகொறடா ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி சிறைத்துறை மற்றும் அரபிந்தோ சொசைட்டி இணைந்து கைதிகளை நல்வழிப்படுத்தும் பல்வேறு முன் மாதிரியாக முயற்சிகளை எடுத்து வருகிறது. யோகா, கைவினை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி மற்றுமொரு சிறப்பான திட்டமாக தண்டனை கைதிகளின் கடுமையான உழைப்பின் மூலம், சிறைச்சாலைக்குள் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அன்னாசி, பருத்தி பயிர் சாகுபடி, ஆடு, மாடு, கோழி, முயல் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். துல்லிய வேளாண்மை, இயற்கை விவசாயம் மூலம் விவசாயத்தில் புதுமை படைத்து வருகின்றனர். அன்னாசியோடு, மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட தோட்டப்பயிற்களையும் சாகுபடி செய்து அசத்தியுள்ளனர்.

இவர்களை ஊக்குவிக்கும் விதமாக, சிறைத்துறையில் நேற்று மாலை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறைத்துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர் முன்னிலை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் அசோகன், துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கைதிகளால் உருவான ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை துவக்கி வைத்து பாராட்டி பேசினர்.

அப்போது தாங்கள் வளர்ர்த்து வரும் முயல், கோழிகளை எடுத்து காண்பித்து கைதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். முன்னதாக கிருத்திகா ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தண்டனை கைதிகள் தயாரித்த பல்வேறு கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

விநாயகர், புத்தர் சிலைகள், கைகளால் வரையப்பட்ட பைகள், மேஜை விரிப்பான்கள் என அனைவரையும் கவர்ந்தது. இதனை அனைவரும் பார்வையிட்டு வியந்து பாராட்டினர். கைதிகளில் விவசாய பணிகள் குறித்து கேட்டபோது,
விவசாயத்தை சாதாரணமாக நினைத்துவிட்டோம். ஒரு பயிரை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிய வருகிறது.

மிகவும் மதித்து, காக்க வேண்டிய தொழில் விவசாயம். இன்றைக்கு நானும் ஒரு விவசாயியாக மாறியுள்ளேன். இங்கே நிலத்தில் வேலை செய்துவிட்டு இரவு தூங்க செல்லும்போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. முழுக்க இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்கிறோம்.

எங்களுக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்திய சிறைத்துறைக்கு நன்றி. சிறைக்குள்ளே மாதம் 6 ஆயிரம் சம்பளம் பெறும் வகையிலான, ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்த சிறைத்துறை ஐஜி ரவி தீப் சிங்க் சாகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button