நாமல் எப்போது கைதாவார்?; அமைச்சர் நளிந்த கூறுவதென்ன

12ஆம் திகதி தான் கைது செய்யப்படுவேன் என்று நாமல் ராஜபக்ஷ அறிந்திருப்பராக இருந்தால் அவர் அன்றைய தினத்தில் கூட்டத்தை நடத்தாமல் அதற்கு முன்னரே கூட்டத்தை நடத்தலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு விகாரையொன்றுக்கு சென்றிருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திற்கு முன்னர் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீதிமன்றக் அறிக்கைகளின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை இடம்பெறும். நாமல் ராஜபக்ஷ என்ன குற்றங்களை செய்தார் என்பது அவருக்கு தெரியும். சீஐடி, எப்சீஐடி மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவர் செய்த குற்றங்களை வெளிக்கொண்டு வரும். தவறு செய்தவர்களுக்கே தான் எந்த அளவுக்குத் தவறு செய்துள்ளோம் என்பது தெரியும்.
ஆதாரங்களின் அடிப்படையில் குற்றங்களை வெளிக்கொண்டு வருவது குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவின் கடமையாகும். தான் செய்த குற்றங்களை அறிந்த ஒருவர், இன்று அல்லது நாளை கைது செய்யப்படுவோம் என்று பயப்படுவதில் ஆச்சரியமில்லை.தாம் குறிப்பிட்ட தினத்தில் கைது செய்யப்படுவோம் என்று அறிந்தால் கூட்டத்தை முன்னரே நடத்தினால் சரிதானே.
எவ்வாறாயினும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாமல் அதற்கு முகம் கொடுக்க வேண்டும்.
![]()