இலங்கை

நெதர்லாந்து தூதுவருடன் சாணக்கியன் சந்திப்பு: தமிழர் பிரச்சினை குறித்து எடுத்துரைப்பு

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும்
நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சாணக்கியன், தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை போன்ற பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளைத் தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து, அங்கு குடியேற்றங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை இதற்கு முக்கியமான உதாரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருபுறம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை வலியுறுத்தி வருவதுடன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

அதேவேளை தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பெரும்பான்மை இனக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடருமானால், எதிர்காலத்தில் மாகாண சபைகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றும் சாணக்கியன் எடுத்துரைத்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதாசாரம் குறைக்கப்பட்டால், அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பிரயோசனமும் கிடைக்காத சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் அண்மையில் உருவாகியுள்ள அரசியல் ஒத்துழைப்பு குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *