இலங்கைக் கடலில் 20 ஈரானிய கப்பல்கள் அமெரிக்கா நடவடிக்கையில் இறங்குமா?; இலங்கையுடன் பேசியதைக் கூற தூதரகப் பேச்சாளர் மறுப்பு

இலங்கைக் கரையை அண்டி நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் அமெரிக்கா ஏதேனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதா என்ற கேள்விக்குப் பதிலளித்த தூதரகப் பேச்சாளர் ஒருவர், தனியுரிமை பெற்ற இராஜதந்திர உரையாடல்களின் உள்ளடக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறினார்.
“தனியுரிமை பெற்ற இராஜதந்திர உரையாடல்களின் உள்ளடக்கங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை. தடைசெய்யப்பட்ட கப்பல்கள் உட்பட, அமெரிக்கத் தடைகள் தொடர்பான தகவல்கள், அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (OFAC) மூலம் பகிரங்கமாகக் கிடைக்கப் பெறுகின்றன,” என அப்பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கைக் கரையை அண்டி, 13 ஈரானியக் கொடிகளை ஏந்திய கப்பல்கள் உட்பட சுமார் 20 ஈரானிய எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் பல கப்பல்கள், சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் “நிழற்படைக் குழு” (shadow fleet) என அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) 58-வது பிரிவின்படி, ஒரு கடலோர அரசுக்கு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) சிறப்பு உரிமைகள் இருந்தபோதிலும், நிலப்பரப்பால் சூழப்பட்ட நாடுகள் உட்பட பிற நாடுகளுக்கும் அங்கு சில சுதந்திரங்கள் உள்ளன. UNCLOS இன் 87-வது பிரிவு, கடலோர அல்லது நிலப்பரப்பால் சூழப்பட்ட நாடுகளாக இருந்தாலும், திறந்தவெளிப் பெருங்கடல்கள் (high seas) அனைத்து நாடுகளுக்கும் திறந்தவை என்று கூறுகிறது.
இருப்பினும், எந்தவொரு கடலோர அரசும் அதன் அடிப்படைக் கோட்டிலிருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்து விரிந்துள்ள அதன் பிராந்தியக் கடற்பரப்பின் மீது இறையாண்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த எந்தவொரு கப்பலும் தனது பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைந்தால் இலங்கை நடவடிக்கை எடுக்க முடியும்.
![]()