இலங்கை

இலங்கையிலிருந்து தப்பிக்க 6.5 மில்லியன் ரூபா செலவிட்ட செவ்வந்தி

இலங்கையிலிருந்து தப்பிக்க இஷாரா செவ்வந்தி 6.5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகத் தெரியவருவதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ தகவல் வெளியிட்டுள்ளது.

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய விவரங்களை ‘காத்மாண்டு போஸ்ட்’ வெளியிட்டுள்ளது.அறிக்கையின்படி,

பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேக நபர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் பகுதிகளில் மிகவும் இரகசியமாக வசித்து வந்தனர்.அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளை தவிர்க்க நேபாளத்தின் இந்தியாவுடனான திறந்த எல்லையைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களைக் கண்காணிக்க உறுப்பு நாடுகளையும் எச்சரித்திருந்தனர்.

சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு கொழும்பு நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கியைக் கொண்டுச் சென்றதாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என கூறி, போலி அடையாளத்தின் கீழ் பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.எவ்வாறாயினும், இஷாரா செவ்வந்தி தனது அறையை விட்டு வெளியேறுவது அரிதாகவே இருந்தது என விசாரணையாளர்கள் காத்மாண்டு போஸ்டிடம் தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேபாள காவல்துறையின் இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தால் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கண்காணிப்கு மற்றும் கைது வடிக்கையை நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தின் குழு மேற்கொண்டது” என்று நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிக்க 6.5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கி, பின்னர் தரை வழியாக நேபாளத்திற்குள் நுழைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நேபாள காவல்துறை தன்னைக் கைது செய்யாது என்று நம்பியதால், அவள் அங்கேயே பாதுகாப்பாக தங்கியருந்தார்.

கெனடி பஸ்தியாம்பிள்ளை (ஜே.கே. பாய் என அழைக்கப்படுபவர்) உட்பட மற்ற சந்தேக நபர்கள் தாமெலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கண்காணிக்கப்பட்டனர், அதே நேரத்தில் மித்ராபார்க், நியூ பஸ் பார்க் அருகே இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சந்தேக நபர்கள் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மீதமுள்ள நான்கு பேர் ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

மலேசியா மற்றும் டுபாய் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மே தலைமையிலான கும்பலைச் சேர்ந்த ஆறு சந்தேக நபர்களும் இருக்கின்றனர்.

சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் பத்மே கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின் கீழ் அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக நேபாள காவல்துறை அதிகாரிகள் காத்மாண்டு போஸ்டிடம் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *