வரதட்சணை கோரி மனைவி மீது கணவன் கொடூர தாக்குதல்

இந்திய மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) பொலிஸில் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த ஆண்டு பெப்ரவரியில் தமக்கு திருமணம் நடந்ததாக கூறியுள்ளார்.
திருமணமான நாளிலிருந்தே கணவர் தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மதுபோதையில் இருந்த கணவர், முதலில் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். பின்னர் சமையலறைக்கு இழுத்துச் சென்று கால்கள் மற்றும் கைகளைக் கட்டினார்.
சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியால் அலறியபோது கொதிக்கும் கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார்.
“எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்றும் கூறி என்னை தொடர்ந்து தாக்கினார்.
தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்” என்று தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் குஷ்பு எப்படியோ அங்கிருந்து தப்பித்து, வீட்டு வேலைக்காரரின் கைப்பேசி மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்றோர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த முறைப்பாடுக்கு அமைய பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
வரதட்சணை கேட்டும் தனது மகளை பிடிக்கவில்லை என்றும் மருமகன் துன்புறுத்தியுள்ளான். அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குஷ்புவின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()