பொதுப்புள்ளியில் தமிழ்த் தேசியக் கட்சிகளை சந்திக்க வைக்க வேண்டியது கட்டாய தேவை; கஜேந்திரகுமார் வலியுறுத்து!

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, தமிழ்த்தேசியம் பேசியதற்காக ஒன்றுசேர வேண்டிய தரப்புக்கள் ஒன்று சேர்வார்கள் என்பதில் எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அவ்வாறானதொரு உத்தரவாதமிருந்திருந்தால் நாங்கள் எவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்க மாட்டோம். சவால்கள் பலவிருந்த போதிலும் பொதுப்புள்ளியில் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்திக்க வைக்க வேண்டியது கட்டாய தேவை. அதனை நாங்கள் தவிர்ப்போமானால் இன்றே தமிழ்த்தேசத்தின் கொள்கை அழியும் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாடு செய்து நடாத்திய மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை (01) மாலை யாழ். நல்லூரில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசம் ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்காமல் சமகால அரசியலுக்கு முகம் கொடுப்பது மிகவும் கடினமானது என்பது இன்றைய யதார்த்தம். தமிழ்த்தேசியவாதத்தை வலியுறுத்துகின்ற கட்சிகள் சிதறிப் போயிருந்தமையாலும், குறிப்பாக தமிழ்த்தேச மக்கள் தங்கள் வாக்குகளைச் சிதைத்தமையாலும் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்காவிடில் தமிழ்த்தேசியத்தின் ஆணை தொடர்பான நடவடிக்கைகளைத் தமிழ்த்தேசியத்துக்கு முழுவிரோதமாக இருக்கக் கூடிய அரசாங்கம் எடுக்கும். ஆகவே, நாங்கள் கொள்கை ரீதியாக ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது எனவும் அவர் மேலும் கூறினார்.
![]()