கேப்பாபிலவு காணிகளை விடுவிக்கக் கோரி பிரதான இராணுவ முகாமின் முன்பாக பெரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இன்று இராணுவ படைத் தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (01) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபிலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்றைய தொழிலாளர் தினத்தன்று இந்த போராட்டமானது தங்கள் பூர்வீக நிலங்களை விடுவித்து தாயக மண்ணில் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது. ஆனால் நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் நியாயமல்ல” என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தங்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவித்து, தங்கள் மண்ணில் அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
இந்தப் போராட்டமானது கேப்பாபிலவு பகுதியில் உள்ள
பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதனை தொடர்ந்து பிரதான வீதி வழியாக பேரணியாக வந்து இராணுவத் தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கேப்பாபிலவு மக்களில் 55 குடும்பங்களின் 59.5 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணியும், இராணுவ வசம் உள்ள மிகுதி மொத்தமாக 171 ஏக்கர் காணியும் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது இராணுவமே எமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறு, நீதி எங்கே நீதி எங்கே? , ஜனநாயக நாடா அல்லது இராணுவ ஆட்சியா?, முகாம்களை மூடு நிலங்களை விடு , பாதுகாப்பு என்ற பெயரில் பறிக்காதே தமிழர் நிலத்தை, விவசாய நிலம் இராணுவத்திற்கு எதற்கு? , ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதே, எமது வாழ்விடம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்ட இடத்தில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
![]()