முச்சந்தி

வரலாற்றின் துயரமிகு வடுக்கள்: செம்மணி புதைகுழியும் – ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையும்!…. நவீனன்

( மனித குலத்திற்கு எதிரான ஸ்ரெப்ரெனிகா இனப் படுகொலையானது, 1996இல் யாழ் செம்மணியில் நிகழ்ந்த படுகொலையை நினைவூட்டுகின்றது. போஸ்னியாவில் கொடூரமான 1995 ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11இல் உலகெங்கும் நினைவு கூறுகிறார்கள்)
போஸ்னியாவில் கொடூரமான ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று இனப்படுகொலையை நினைவு கூறும் வண்ணம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நினைவு கூர்வது வழக்கம். இந்த ஆண்டு 30 வது ஆண்டு என்பதால் இந்த நினைவு தினத்தினை மிகப் பெரிய அளவில் அனுசரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரெப்ரெனிகா – செம்மணி :
ஐ.நா தடுக்க தவறிய ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை போன்றே தமிழர் தாயகத்திலும் செம்மணி இனப்படுகொலையின் நீண்ட வலி இன்னமும் தொடர்கிறது.
முப்பதாண்டுகளின் பின்னரும் உறவுகளைத் தேடும் போஸ்னியர் போல தமிழ் மக்களும் தங்கள் உறவுகளை இன்னமும் தேடி வருகின்றனர்.
யாழ் குடாநாட்டை சிறிலங்கா அரசு 1996இல் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் யாழ் நகரத்திலிருந்த இராணுவத்தினருக்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் ஜானகப் பேரேரா இருந்தபோது குடாநாட்டில் கைதாவோர், காணாமற்போவோர் பட்டியல் நாள்தோறும் அதிகரித்துச் சென்றதுடன், பெண்கள் மீதான துன்புறுத்தல்களும் மக்கள் உயிரிழப்புகளும் அதிகரித்தன.
முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா 1994இல் புதிதாக ஆட்சியினைப் பொறுப்பேற்ற பின், அவர் தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக காணாமற்போனவர்கள் புதைக்கப்பட்ட சூரியகந்த புதைகுழிகள் போன்ற பல புதைகுழிகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியதோடு குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியதாக காட்டிக்கொண்டது.
சமாதானத்துக்கான போர்:
ஆயினும் “சமாதானத்திற்கான போர்” என்னும் பெயரில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பத்தொன்பதாம் திகதி புலிகளுக்கும் அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்ததை தொடர்ந்து போர் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டன. 1995 இன் இறுதிகளில் யாழ் நகரையும், 1996 இன் நடுப்பகுதிகளில் யாழ் குடாநாடு முழுவதனையும் இராணுவத்தினர் கைப்பற்றினர்.
1996 நடுப்பகுதிக்குப் பின்னான ஆறு மாதக் காலப்பகுதியில் காணாமற்போனோர் பட்டியல் எழுநூறிற்கு மேல் அதிகரித்தது.
செம்மணி படுகொலை தொடர்பாக பல இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றில் அவர்களது உறவினர்களால் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பின்படி குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்ட ஐந்து இராணுவத்தினருக்கும் ஒரு காவற்றுறையினருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டவர்களிலில் “லான்ஸ் கோப்ரல் சோமரட்ணா ராஜபக்ச” விசாரணையின்போது கீழ்வருமாறு வாக்குமூலம் அளித்தார். யாழ்குடாநாட்டில் பரவலாக கைதுசெய்து காணாமற்போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் இரவில் எடுத்துச்செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டது. முந்நூறு, நானூறு பேரை புதைத்த புதைகுழிகளை என்னால் காண்பிக்க முடியும் என்றார். இதன்பின்னர் 1999ஆம் ஆண்டில் “லான்ஸ் கோப்ரல் சோமரட்ணா ராஜபக்ச” வினால் செம்மணியில் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் புதைகுழிகளைத் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்திட்காக பெண்களை கைது செய்யும் போது, சாட் சிகள் இருக்கக்கூடாது என்பதட்காக மொத்த குடும்பத்தையும் கொன்றிருக்கிறார்கள்.
குழந்தைகள் சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என பல தரப்படடவர்களின் எலும்புக் கூடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கொல்லப்படட வர்களின் தாய் தந்தையர் சகோதரர்கள் உறவினர்களிடமிருந்தோ பெரியளவிலான முறைப்பாடுகள் ஏதும் வெளிவராவண்ணம் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரம் ஒரு நேர்த்தியான திட்டமிடப்பட்ட இனப்படுகொலையே. இதுவரையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன. புதைகுழியில் இருந்து பாடசாலைப் புத்தகப் பை, பொம்மை, காலணி, சிறு வளையல் போன்ற பொருட்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
ஆயினும் இன்னும் பல தமிழ் உறவுகளைப் பற்றி அறிய முடியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்களா அல்லது கொல்லப்படடார்களா என்று தெரியவில்லை. தமிழ் மக்களைப் போலவே, போஸ்னியாவில் முப்பது ஆண்டுகளாக இன்னமும் எலும்புகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஐ.நாவின் இயலாமையை வெளிப்படுத்திய ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை முப்பதாண்டுகள் கடந்தும் இன்னும் பலரின் நிலை தெரியாமல் உள்ளது.
ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை:
பால்கன் (Balkan States) தேசங்களில் தீவிரமான போர் காலங்களில் இந்த கொடூரமான படுகொலை நிகழ்ந்தது. 1995 ஜூலையில் ஸ்ரெப்ரெனிகாவில் ஒரு வாரத்துக்குள் விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் சென்ற மொத்தம் எண்ணாயிரத்திற்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறார்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சேர்பியப் படைகள் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை தனியே பிடித்து வைத்திருந்து இப்படுகொலைகளை மேற்கொண்டிருந்தது. இது இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பின்பு ஐரோப்பிய நிலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலையாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இதுவரையில் என்பதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகளிலிருந்து 6900 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. போஸ்னிய இஸ்லாமியர்கள் மற்றும் குரோசிய இன மக்களுக்கு எதிராக சேர்பியாகளின் படை நடத்திய தாக்குதல்களில் 1992 க்கும் 1995 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலத்தில் நடந்த மிகப்பெரிய படுகொலையாக பார்க்கப்படுகிறது.
சேர்பிய படையின் தாக்குதல்:
போஸ்னியாவின் சேர்பிய கட்சியின் தலைவர் ரேடோவான் கராட்சிக் என்பவர் சேர்பியர்களுக்கான தனி ’சேர்பிய தேசிய அவையை (Serbian National Assembly)உருவாக்கினார். சேர்பியர்களின் படையும் தனியே உருவாக்கப்பட்டஉ இருந்தது. அதேவேளை 1992 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் போஸ்னியாவின் விடுதலையை அங்கீகரித்தன.
இதன் பின்னர் போஸ்னியாவில் இருந்த சேர்பியர்களின் படை, யூகோஸ்லாவிய ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு போஸ்னியாவின் தலைநகரத்தை தாக்கியது.
கிழக்கு போஸ்னியாவில் இருந்த இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளையும் தாக்கினார்கள். போஸ்னியாவின் பல பகுதிகளை சேர்பியர்களின் படை கைப்பற்றியது. இதற்கிடையில் இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டன. அரசியல் தலைவர்களும், அறிவுஜீவிகளும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஏராளமான குரோசியர்களும், போஸ்னிய இஸ்லாமியர்களும் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.
1995ம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா, செபா, கொராஸ்டெ ஆகிய மூன்று நகரங்கள் போஸ்னிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்பகுதியில் அகதிகள் ஏராளம் இருந்ததால் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, ஐ.நாவின் அமைதிகாப்புப் படை அங்கிருந்தது. அங்கு 50,000 பொதுமக்கள் அகதிகளாக இருந்தார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை இயலாமை:
ஜூலை 11, 1995 அன்று ராட்கோ மிளாடிக் எனும் தளபதியின் உத்தரவுப்படி சேர்பியாகளின் படை ஸ்ரெப்ரெனிகா பகுதிக்குள் நுழைந்தது. போஸ்னிய இஸ்லாமியர்களை படுகொலை செய்யத் தொடங்கியது. சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஏராளமான போஸ்னிய இளைஞர்களை அவர்களின் மரணத்திற்கு முன்பு அவர்களையே குழிவெட்ட சொல்லி, அக்குழியில் அவர்களை சுட்டுத் தள்ளியது சேர்பியாகளின் படை. இந்நிகழ்வில் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு வார கால இடைவெளிக்குள் இந்த படுகொலைகள் நடைபெற்றன.
கோரமான ஸ்ரெப்ரெனிகா படுகொலையானது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் இயலாமையை அப்பட்டமாக வெளிக்காட்டியது. போரின்போது ‘பாதுகாப்பான பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில், ஐ.நா. அமைதிப்படையினரின் பிரசன்னத்தையும் மீறி சேர்பியப் படைகளால் இந்த இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இக்கொடூரச் செயல் உலக அளவில் பேரதிர்ச்சியையும் கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது.
இந்த இனப்படுகொலையின் போது, பெண்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். பெண்கள் மற்றும் சிறுமிகள், சேர்பியப் படையினரால் பாலியல் வன்கொடுமைகளுக்கும் கொடிய சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும் வலுவான சாட்சியங்கள் உள்ளன.
ஸ்ரெப்ரெனிகா தாய்மார் அமைப்பு:
இந்தத் துயரத்தின் விளைவாக, “ஸ்ரெப்ரெனிகா தாய்மார் அமைப்பு” (Mothers of Srebrenica) உள்ளிட்ட பல பெண்கள் உரிமை அமைப்புகள் உருவாகின. இந்த அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல்களைக் கண்டறிந்து நீதியைப் பெறுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் தொடர்ந்து முறையிட்டனர்.
ஸ்ரெப்ரெனிகா உட்பட போஸ்னியா முழுவதும் பல புதைகுழிகளில் உடற்கூறுகள் இன்னும் கிடைக்கின்றன. பல குடும்பங்கள் தமது உறவுகளின் உடல்களைத் தேடி அலைவதும், கிடைத்தவைகளை DNA மரபணு மூலம் அடையாளம் காண்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
1996 ஆம் ஆண்டு முதல், புதிதாகக் கண்டெடுக்கப்படும் உடற்கூறுகள், DNA பரிசோதனையின் மூலம் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட பின்னர், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11 அன்று நடைபெறும் நினைவு தினத்தில், ஸ்ரெப்ரெனிகா-போட்டோசாரி நினைவிடத்தில் மிகுந்த மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகின்றன.
2020-ஆம் ஆண்டின் நிலவரப்படி, படுகொலை செய்யப்பட்டவர்களில் சுமார் 6,993 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போனோர் பட்டியலில் இருப்பது வேதனைக்குரியது.
நீண்டகால உளவியல் வடு:
கொடூரமான இந்தப் இனப்படுகொலை ஏற்படுத்திய உளவியல் வடுக்கள், பல பெண்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவர்களையும் மகன்களையும் இழந்து விதவைகள் ஆனார்கள்.
அத்துடன் அவர்களின் குழந்தைகள் தந்தையற்றோராய் நின்றனர். இத்தகைய துயர நிலையிலும் துவண்டுவிடாமல், இந்தப் பெண்கள் நீதிக்காக நடத்திய போராட்டம், உலகிற்கே ஓர் உதாரணமாகத் திகழ்கின்றது.
ஸ்ரெப்ரெனிகா அன்னையர் (Mothers of Srebrenica) என்ற அமைப்பு, இனப்படுகொலையின் போது ஐ.நா. அமைதிப்படையின் கீழ் செயல்பட்ட நெதர்லாந்துப் படையினரும், ஐ.நா.வும் தங்களது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி, 2000இல் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ள முழுமையான சட்டப் பாதுகாப்புரிமை (Absolute Immunity) காரணமாக, அதன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், நெதர்லாந்து அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், 2011இல் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நெதர்லாந்து அரசு உரிய நட்டஈட்டை வழங்க வேண்டுமென அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்த பின்னரும், நீதியையும் உண்மையையும் நிலைநாட்டியிருக்கின்றனர்.
படுகொலையானவர்களின் ஸ்ரெப்ரெனிகா நினைவகம் (Srebrenica Memorial), அதிகாரப்பூர்வமாக “பொட்டோச்சாரி ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை நினைவு மைய கல்லறை” (Memorijalni centar Srebrenica-Potočari) அங்கே பொது மக்களால் அமைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button