யாழில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்களில் வெள்ளை ஈயின் தாக்கம்

சாவகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வெள்ளை ஈ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும்-14 ஆம் திகதியிலிருந்து இரண்டு வார வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், மேற்குறித்த ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள அனைத்துத் தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் திரவக் கரைசலை விசிறவுள்ளதாகவும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் நல்லூரடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது.
சாவகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வெள்ளை ஈயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும்- 14 ஆம் திகதியிலிருந்து இரண்டு வார வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
மேற்குறித்த ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள அனைத்துத் தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவக் கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களைப் பயன்படுத்தவுள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்குக் கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம்.
இதனை முன்னெடுப்பதற்கு எமக்கு ஆளணிப் பற்றாக்குறை, உணவுப் பிரச்சினை, பணியில் ஈடுபடவுள்ளோருக்கான சம்பளக் கொடுப்பனவு பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, இந்தப் பணியைத் தனியாக அரசாங்கமோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ செய்ய முடியாது. மக்களும் எங்களுடன் கைகோர்த்தால் மாத்திரமே இந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும். இந்தப் பணியில் பங்கெடுக்க விருப்புவோர் சுயாதீனமாக வந்து பிரதேசங்களைத் தாண்டியும் உங்களது பங்களிப்பை வழங்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
![]()