முச்சந்தி

மனித உரிமை மீறல்களுக்குமான பொறுப்புக்கூறலே மிகவும் அவசியம்; வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் 46/1 தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு, கடந்தகால போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அனைத்து வகையான மனித உரிமை மீறல்களுக்குமான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் விநாயகமூர்த்தி கமலினி கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க் ட்ரக் வருகையின் போது நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோவில் முன்றலில் கனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மனித உரிமை அமைப்புகளின் கூட்டான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஆகிய நாம் எமது பரிந்துரைகளை பின்வருமாறு தங்களுக்கு முன்வைக்கிறோம்.

இலங்கை ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் 46/1 இனை ஏற்றுக்கொண்டு, கடந்தகால போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அனைத்து வகையான மனித உரிமை மீறல்களுக்குமான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை அமுல்படுத்த வேண்டும்.

இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்ந்து உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச அறிவுறுத்தல்களுடனும் சர்வதேசத்துடன் இணைந்தும் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையானது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உறவுகளுக்கான நினைவு கூறலை மேற்கொள்ளவும் அவர்களுக்காக தனியாகவும் கூட்டாகவும் நினைவுச் சின்னங்களை உருவாக்குவதையும் தடுக்கக்கூடாது.

இலங்கையானது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கலை முடிவுறுத்தி சிவில் வாழ்வில் இயல்புநிலையை உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையானது. சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்.

இலங்கையானது, பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதையும் துன்புறுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கையானது, இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளையும், தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டிருக்கும் காணிகளையும் விடுவிக்க வேண்டும்.

இலங்கையானது வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலை முடிவுறுத்துவதுடன் இப்பிரதேசங்களிலுள்ள இந்து மற்றும் இஸ்லாமிய வணக்கத்தலங்கள் ஆக்கிரமிக்கப்படுதை தடுக்க வேண்டும்.

இலங்கையானது, போரினால் காயப்பட்டோர் மற்றும் அங்கவீனமானோர்கனிதும், உடல்களில் செல்துண்டுகள் மற்றும் சன்னங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களினதும் சமூக பொருளாதார, சுகாதார நிலைமைகளை கவனத்திற்கெடுத்து அவர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்க வேண்டும்.

இலங்கையானது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டையும் நட்டஈட்டையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம் 30/1 இன் ஏற்பாடு 20 ஆனது. அதிகாரப்பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை குறிப்பிடுகிறது. தமிழருக்கு அரசியல் அதிகாரத்தை புறக்கனித்தல் மற்றும் சமத்துவமற்ற அணுகுமுறையே இன முரண்பாடு, போர் மற்றும் இலங்கை அரசின் தமிழின அழிப்பு ஆகியவற்றுக்கு மூல காரணம், போருக்கு பின்னரான எந்த அரசாங்கமும், வடக்கு கிழக்குக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தை இதுவரையில் முன்வைக்கவில்லை.

எனவே, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத முறையிலான அதிகாரப் பகிர்வை நாம் நிலையான அரசியல் தீர்வுக்காண தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் .

ஆகவே வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு சார்பாக எமது கோரிக்கைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு முன்வைக்கிறோம் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button