இந்தியா

12 வருட காதல் – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

பீகார் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆவார். இவர் கடந்த 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை பீகாரின் முதலமைச்சராகவும், எம்.எல்.ஏ, எம்.பி ஆகிய பதவிகளிலும் பொறுப்பு வகித்துள்ளார்.

அதே போன்று, காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் தேஜ் பிரதாப் யாதவ், பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராகவும் பதிவி வகித்தவர். தற்போது அவர், ஹசன்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். இது தற்போது பீகார் மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளப் பக்கமாக ஃபேஸ்புக்கில் தனக்கும், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுக்கும் இடையில் இருக்கும் நீண்ட கால உறவு குறித்து தேஜ் பிரதாப் யாதவ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், இருவரும் 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த பதிவு வெளியான அடுத்த நாளில், தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்தும், குடும்ப உறவுகளிலிருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

‘தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற நடத்தை எங்கள் குடும்ப மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே, மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக, நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன். இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. அவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறமை கொண்டவர். அவருடன் உறவு கொள்ள விரும்புவோர் தங்கள் சொந்த விருப்பப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இருப்பினும், தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து லாலு பிரசாத்தின் இளைய மகனும், தேஜ் பிரதாப்பின் தம்பியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,

“என்னைப் பொறுத்தவரை, இதையெல்லாம் நான் விரும்புவதும் இல்லை, பொறுத்துக்கொள்வதும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கை தனித்தனியாக இருக்க வேண்டும். அவர் மூத்தவர், அவருக்கு சொந்தமாக முடிவுகளை எடுக்க உரிமை உண்டு. ஆனால் லாலு பிரசாத், தனது முடிவுகளை ஒரு ட்வீட் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் சரி என்று நினைத்ததைச் செய்துள்ளார். இதைப் பற்றி ஊடகங்கள் மூலம்தான் எனக்குத் தெரியவந்தது” எனக் கூறினார்.

இந்தாண்டு இறுதியில் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேஜ் பிரதாப் யாதவ் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், கடந்த 2020 தேர்தலில் சமஸ்திபூரில் உள்ள ஹசன்பூர் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *