முல்லைத்தீவில் கடற்படையினர் குப்பைக்கு வைத்த தீயால் கடற்றொழிலாளியின் வாடி முற்றாகத் தீக்கிரை

முல்லைத்தீவில் கடற் படையினர் குப்பைக்கு வைத்த தீயினால் கடற்றொழிலாளி ஒருவரின் வாடி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
வியாழன் மாலை 5 மணியளவில் முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் உள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமில் குப்பைக்கு வைத்த தீயே இவ்வாறு பரவியுள்ளது.
இதனால் கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடற்படை முகாமில் குப்பைக்கு தீ வைத்துள்ளார்கள். இந்த தீயானது பரவி கடற்படை முகாமில் நின்ற பனை மரங்களில் பரவி உள்ளதுடன் தீ காற்றில் பரவி கடற்கரையில் வாடியமைத்து தொழில் செய்து வந்த ஒருவரின் வாடி மீது விழுந்தது வாடி முற்று முழுதாக எரிந்துள்ளது.அதில் பெறுமதியிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பரவிய தீ கடற்கரை பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் அமைத்த கோட்டில்களிலும் பரவியுள்ளது. சம்பவம் அறிந்து செல்வபுரம் கடற்கரையில் நின்ற இளைஞர்கள் தீவிரமாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த தீ விபத்தில் வாடி முற்று முழுதாக எரிந்த கடற்தொழிலாழியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த தீ விபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தீவிபத்தில் வாடி எரிந்து சாம்பலாகிய வாடியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
![]()