உலகம்

சர்வதேச சமூகத்துக்கு அவமானம்; ஐ.நா.,வில் பாகிஸ்தானை சாடிய இந்தியா!

‘பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான், மக்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது சர்வதேச சமூகத்திற்கு அவமானமாகும்’ என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கடுமையாக சாடியது.

‘ஆயுத மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகள் இருந்த போதிலும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக பாகிஸ்தானை இந்தியாவின் நிரந்தர தூதர் ஹரிஷ் பூரி கடுமையாக சாடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: பல விஷயங்களில் பாகிஸ்தான் பிரதிநிதியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். நமது எல்லைகளில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை கொன்ற பிறகு பிரசங்கிப்பது மிகவும் பாசாங்குத்தனம்.

பயங்கரவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாத ஒரு நாடு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. பாகிஸ்தான் மக்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது சர்வதேச சமூகத்திற்கு அவமானமாகும். இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் வேண்டுமென்றே இந்திய எல்லை கிராமங்களை குறிவைத்தது.

20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குருத்வாராக்கள், கோவில்கள் மற்றும் மடங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே, ஏனெனில் அதன் நோக்கம் நமது செழிப்பு, முன்னேற்றம் மற்றும் மன உறுதியைத் தாக்குவதாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *