இலங்கை

கொழும்பு – வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி!!; முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா?

கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, முன்னாள் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் தொடர்புடையது என்பது நடந்து வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் வைத்து இரண்டு பெண்களிடம் இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களைக் கைது செய்து விசாரித்ததைத் தொடர்ந்து, ருவன்வெல்லவில் உள்ள மூன்றாவது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபர் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்னாள் சமையல்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கையாளும் விசாரணையில், ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 68 வயதான இலங்கைப் பெண், முன்னாள் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 68 வயது பெண் மற்றும் அவரது 40 வயது கஜகஸ்தான் மருமகளின் வாக்குமூலங்களிலிருந்து தங்க வண்ணம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளன.

விசாரணைகளின்படி, துப்பாக்கியின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் அமைச்சர் வெள்ளவத்தையில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்ததாகவும், தற்போது 68 வயதான பெண் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

ருவன்வெல்லவில் கைது செய்யப்பட்ட நபர், அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சமையல்காரராகப் பணியாற்றி வந்தவர், ஆயுதத்தை கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.

அமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறிய பின்னர், சமையல்காரர் T-56 துப்பாக்கியை மற்றொரு பையுடன் 68 வயதான பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, ​​சமையல்காரர் பின்னர் திரும்பி வந்து பைகளில் ஒன்றை மட்டுமே மீள எடுத்துக் கொண்டதாக அந்தப் பெண் தெரிவித்தார்.

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விளையாட்டு துப்பாக்கி என்று எண்ணியதாகவும், அது ஒரு உண்மையான ஆயுதம் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது குழந்தைகளின் கல்விப் பயணத்திற்காக ஒரு பையை எடுக்க பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தையில் உள்ள தனது மாமியாரின் வீட்டிற்குச் சென்றதாக கஜகஸ்தான் நாட்டு பெண் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி இருந்த பையை அறியாமலேயே எடுத்து பை மற்றும் ஆயுதம் இரண்டையும் தனது வாகனத்தில் தனித்தனியாக வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிது நேரம் வெளியே சென்று வீட்டிற்குத் திரும்பியதும், துப்பாக்கியை தனது மாமியார் வீட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் பொலிஸாரிடம் மேலும் விளக்கினார்.

இந்நிலையில், மீட்கப்பட்ட ஆயுதம் மேலும் பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *