இலங்கை

அழிவு நிலைக்கு தள்ளப்படும் மன்னார் தீவு; மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாது- மாக்கஸ் அடிகளார் வேண்டுகோள்..!

மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது எனவும் இதற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் எவ்வித அனுமதியும் இன்றி கணிய மணல் அகழ்வு நடவடிக்கை மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்காக மக்களினுடைய காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதனையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் செயல்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனால் மக்களினுடைய வாழ்வாதாரமும்,எதிர்காலமும் பாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மக்களின் எதிர்கால பிரச்சனைகளை உள்வாங்காமல்,அரச திணைக்களங்களின் ஆதரவுடன் பல நிறுவனங்கள் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

மக்களை அழிவிலிருந்து காப்பாற்றாது,இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயல்படும் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து கின்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு வருகின்ற எந்த நிறுவனங்களுக்கும் மக்கள் எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டாம்.இரண்டு கணிய மணல் அகழ்வு நிறுவனங்களும்,மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும், மன்னார் மக்களுக்கு எதிராக மிக வேகமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நிறுவனங்கள் பலரை பணம் கொடுத்து வாங்கும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளனர்.ஏழ்மை நிலையில் உள்ள மக்களையும் ஏமாற்றி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தாம் கை கொடுப்பதாக கூறி மக்களை திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

மேலும் மக்களின் காணிகளை அதிக பணம் கொடுத்து வாங்கி காணியை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டு வாழ்விடங்களை பறிக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இதற்கு எதிராக போராட முன் வர வேண்டும்.மக்கள் குறித்த திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதியை வழங்கக் கூடாது என கேட்டுக் கொள்ளுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *