இலங்கை

அரச வைத்தியசாலைகளில் கடும் மருந்து பற்றாக்குறை?

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

“அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை.

மேலும், வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை.

நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றிலும் கூட பிரச்சனை இருப்பதாக எங்களுக்குக் தகவல்கள் கிடைக்கின்றன.

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம்.

“சில மருந்துப் பற்றாக்குறைகள் வைத்தியசாலை அமைப்பிலேயே உள்ளன.” என்றார்.

இதற்கிடையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 8.00 மணிக்கு வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுன், இந்த வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக குறித்த பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலை எதிர்பார்த்திருந்த போதிலும், சுகாதார அமைச்சு அதை வழங்கவில்லை என்றும், இந்த விடயத்தில் அவர்கள் தலையிடாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று என்றும் அவர் மேலும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *