கவிதைகள்
“அப்பா எந்தன் அகத்துள் இருக்கிறார்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா.

இப்படி அப்பா இருப்பார் என்று
எண்ணியே நானும் இருந்ததே இல்லை
மருந்தாய் இருப்பார் மருத்துவ ராவார்
விருந்தாய் இருப்பார் வீழ்ந்திடா காப்பார்
கண்ணுள் இருக்கும் மணியே அப்பா
கஷ்டங்கள் அணுகா காவலாய் இருப்பார்
எண்ணாய் இருப்பார் எழுத்தாய் இருப்பார்
எழுந்து நிற்க ஊன்றுகோல் ஆகுவார்
தானும் படிப்பார் படித்திட வைப்பார்
தலைமைப் பண்பை உணர்த்தியே நிற்பார்
கற்றவர் அவையில் முன்னிலை வகியென
கனிவாய் கண்டிப்பாய் சொல்லுவார் அப்பா
எல்லாப் பாடமும் சொல்லித் தருவார்
இலகுவாய் இதயம் அமர்ந்திடச் செய்வார்
பொல்லாங் கென்றால் பொங்கியே எழுவார்
பொறுமை பணிவு அவசியம் என்பார்
கடவுள் நம்பிக்கை மிகிந்தவர் அப்பா
மூடத் தனத்தில் மூழ்கிடார் அப்பா
ஆடம் பரங்கள் தவிர்ப்பார் அப்பா
அக ஒழுக்கமே உயிரெனச் சொல்லுவார்
வளர்ந்தேன் படித்தேன் பட்டங்கள் பெற்றேன்
உயர்ந்த பதவியில் உட்கார்ந்தும் இருக்கிறேன்
அனைத்தும் அடைந்திட ஆணிவேர் அப்பா
இப்படி அப்பாவை இறைவன் கொடுத்தான்
அப்பா இப்போ அவனியில் இல்லை
இல்லை என்று நான் எண்ணுவதில்லை
என்னுள் அப்பா இருப்பதாய் எண்ணியே
இன்னும் இப்புவி வாழ்வைத் தொடர்கிறேன்!
![]()