கவிதைகள்

“இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
       மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

பள்ளிக்குச் சென்றார் படிப்பிலே நாட்டமில்லை
துள்ளி விளையாடினார் சோலைகளை நாடினார்
பாடினார் ஆடினார் பரவசத்தில் மூழ்கினார்
பக்குவத்தை நோக்கியே பயணத்தைத் தொடங்கினார் 
 
வித்தியாச விளையாட்டு வித்தியாசச் சிந்தனை
ஓவியத்தில் நாட்டம் உணர்வெல்லாம் இறையே
கழிமண்ணை எடுப்பார் கடவுளுரு ஆக்குவார்
கண்களை மூடுவார் காசினியை மறந்திடுவார்
 
அந்தணராய் பிறந்தார் ஆசையின்றி இருந்தார்
அர்ச்சகராய் அம்பாளை அனுதினமும் சேவித்தார்
காமமும் அறியார் கசடவர் மனமில்லை
காளியம்மா நினைப்புடனே ஆலயத்தில் இருந்தார்
 
தனைமறந்து தியானத்தில் சலனமின்றி இருப்பார்
வீடுதனை நாடாமல் காளிகோவில் இருப்பார்
தேடிவரும் உறவுகள் திகைத்துமே நிற்பார்
தினந் தினமும் இப்படியே நடந்தபடியிருக்கும் 
 
தாயார் பயந்தார் தமயனும் பயந்தார்
மணமுடித்தால் நிலமாறும் எனவவரும் நினைத்தார்
சரியான தேர்வாகச் சாரதா அமைந்தார்
சாமியார் மகனுக்குத் தாரமாய் ஆக்கினார்
 
கட்டிய மனைவியை காளிமாதாவாய் கண்டார்
காதலோ காமமோ அவரகம் இல்லை 
எல்லா இடமும் காளியே தெரிந்தாள்
இறுகப் பற்றினார் காளியின் திருவடி 
 
பாசம் பந்தம் அனைத்தும் காளியே
பகலும் இரவும் தியானத்தில் இருந்தார் 
ஞானம் காளியால் அவருளே நிறைந்தது
ஞானியாய் மலர்ந்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர்
 
அவருடைய வாக்கில் அருள்நிறைந் திருக்கும்
அவருடைய நோக்கில் அஞ்ஞானம் அகலும்
அவர்தொட்டு விட்டால்  ஆணவமே அகலும்
அவரருகில் இருப்பார் ஆசியினைப் பெறுவார்
 
வந்தாரே ஒருவர் தொட்டாரே அவரை
வந்தவர் மனத்தில் உருவேறி நின்றது
உருவேற்றம் பெற்றவர் உண்மையை உணர்ந்தார்
உத்தம சீடராய் உலகவலம் வந்தார்
 
வீரத் துறவியாய் வெளிப்பட்டார் அவரும்
வேதத்தின் சாரத்தை விளக்கினார் எங்கும்
குருவினது பெயராலே தொடக்கினார் இயக்கம்
ராமகிருஷ்ண மிஷனாக விரிந்ததே எங்கும் 
 
மதங்கள் அனைத்தும் வழியெனச் சொன்னார்
மதங்களின் நோக்கம் இறையினைக் காண்பதே
பெண்களை மதிப்பது பெருங்கடன் என்றார்
அனைத்துப் பெண்களும் அன்னையர் என்றார் 
 
யாவரும் விளங்கிட போதனை புகன்றார்
உபதேசம் அனைத்துமே உன்னதம் ஆகும்
பற்றே இல்லா வாழ்ந்தார் உலகிலே
பக்குவம் பக்தியைத் தத்துவம் ஆக்கினார்
 
சாராதா அம்மையார் சரித்திரம் ஆவார்
இந்திய தேசத்து இணையிலாப் பெண்ணவர்
கட்டிய கணவனைத் தெய்வமாய் கண்டவர்
கற்புத் தெய்வமாய் ஒளிர்கிறார் அம்மையார்
 
இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்
கலியுகத்தில் ஞானியாய் கால்பதித்து நின்றார்
அவருடைய வாழ்க்கை அவருடைய சிந்தனை
அருமருந்தா யனைவருக்கும் அமைந்துமே இருக்கு  ! 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button