இலங்கை

சலேவை தினமும் சந்திக்க சட்டத்தரணிக்கு அனுமதியில்லை

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, ​​உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததன் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு, நாளாந்தம் சட்டத்தரணி உதவியை வழங்குவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது.

சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலேவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் 5 நாட்களும் சலே தமது சட்டத்தரணி அசித சிறிவர்தனவைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு மனோரி சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அதன் பணிப்பாளர் ஷானி அபேசேகர இந்த விபரத்தை அறிவித்துள்ளார்.

சுரேஷ் சலே தற்போது விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் சட்ட ஆலோசனைகளைப் பெற வேண்டிய அவசியம் எழவில்லை என்று அந்தக் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தரணியைத் தொடர்ச்சியாகச் சந்திப்பதன் மூலம் சந்தேகநபருக்குத் தேவையான மன அமைதி (ஓய்வு) இல்லாது போய், அவரது சுகாதார நிலைக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாத்திரம் சட்டத்தரணி அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மனோரி சலேவுக்கு அனுப்பிய கடிதத்தில் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, சலேவின் சட்டத்தரணியான அசித் சிறிவர்தனவுக்கு ஒவ்வொரு புதன்கிழமையன்று மாத்திரம் சலேவைச் சந்திக்க அனுமதி வழங்க முடியும் என்றும், குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு தினமும் அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், சட்டத்தரணி சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க முடியாது என்றும் அவர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button