இலங்கை

244 சிங்கள மீனவர் குடும்பங்களைக் கொக்கிளாயில் குடியேற்ற அரசு சதி;  கஜேந்திரகுமார் தெரிவிப்பு

முல்லைத்தீவுக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர் குடும்பங்களை கொக்கிளாய் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும், கடந்த அரசாங்கங்கள்கூட செய்யாத விடயத்தை இந்த அரசாங்கம் செய்வதனை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

கொக்கிலாய் முகத்துவாரத்தில் 244 மீனவர் குடும்பங்கள், காலம் காலமாக நீர்கொழும்பில் இருந்து வந்து வாடி அமைத்து தமது தொழில்களை செய்வது வழக்கமாகும். அந்த குடும்பங்கள் ஒரு சில மாதங்களுக்கு வந்து தங்கிருந்து மீண்டும் தமது ஊருக்கு திரும்புவர். இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலங்களிலும் இந்த குடும்பங்கள் முல்லைத்தீவில் தங்களுக்கு நிரந்தர வசிப்பிடங்களை அமைப்பதற்கு முயற்சித்த போதும், அவர்களுக்கு நிரந்திரமான இருப்பிடங்கள் இல்லாத காரணத்தினால் அது முடியாமல் போனது. இதனால் அவர்கள் அந்தந்த காலப்பகுதியில் அங்கு வந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் டித்வா புயலுக்கு பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம் அவசியம் என்ற போர்வையில் முதற்தடவையாக அந்த மாவட்டம் சாராத வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமாக வீடுகளை அமைப்பதற்கு மிகவும் தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களுக்கு கொக்கிலாய் வைத்தியசாலைக்கு பின்னால் கொக்கிலாய் மேற்கு கிராம சேவகர் பிரிவில் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

எங்களை பொறுத்தவரையில் இது தவறான விடயாகும். தமிழ் பிரதேசங்களில் இன விகிதாசாரத்தை மாற்ற முயற்சித்தமையினாலேயே இனப்பிரச்சினை வெடித்தது. இது இந்த அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும். இவ்வாறான நிலைமையில் 244 குடும்பங்களை நிரந்தமாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இனவாத ரீதியாக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செயற்பட்டதென குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் நேரத்தில் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செய்யாத விடயங்களை இந்த அரசாங்கம் செய்வது பொறுத்தமானது அல்ல. இதனால் இந்த விடயத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்.

இதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தியில் குஞ்சுக்கால்வழி என்ற பிரதேசத்தில் தமிழர்கள் உறுதிகாணிகளை வைத்துள்ள பிரதேசத்தில் தெற்கை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக 4 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற வகையிலேயே நடந்துள்ளது. அந்த வர்த்தகர் மேலதிகமாக 15 ஏக்கர்காணியை பிடித்து பிரதேசத்தை ஆக்கிரமித்து உப்பளமொன்றை நடந்த முயற்சிக்கின்றார். அது தனியார் காணியே உறுதிக்காரருக்கே வழங்க வேண்டும். அந்த மண்ணுடன் தொடர்பில்லாதவருக்கு அபிவிருத்தி என்ற பெயரில் இவ்வாறு காணியை ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. அங்கு மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளன. இதனால் இந்த விடயத்தை நிறுத்த வேண்டும் என்று நான் கரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button