பலதும் பத்தும்

அணுகுண்டுக்கே ஆயுதமா!; வட கொரியா ஜனாதிபதிக்கு துப்பாக்கி பரிசளித்த பெலாரஸ்

வடகொரியாவிற்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கிம் ஜாங் உன்னுக்கு நவீன ரகத் துப்பாக்கி ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பியொங்யாங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பெலாரஸில் தயாரிக்கப்பட்ட நவீன தானியங்கி துப்பாக்கி ஒன்றை கிம் ஜாங் உன்னுக்கு லுகாஷென்கோ வழங்கியுள்ளார்.

“எதிரிகள் யாராவது தோன்றினால் இதைப் பயன்படுத்துங்கள்” என அவர் கிண்டலாகக் கூறியபோது, கிம் ஜாங் உன் அதனைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டுள்ளார்.

பதிலுக்கு, கிம் ஜாங் உன் லுகாஷென்கோவிற்கு ஒரு வாள் மற்றும் லுகாஷென்கோவின் உருவம் பொறிக்கப்பட்ட பெரிய பூச்சாடி ஒன்றையும் பரிசளித்துள்ளார். வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகியவற்றுக்கிடையே புதிய ‘நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு’ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ‘அடிப்படை நட்பு ஒப்பந்தம்’ உறவுகளை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

“சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்” என லுகாஷென்கோ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *