இலங்கை

பல சாட்சியங்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் செம்மணிச் சூத்திரதாரிகளை சோமரத்னவுக்கு தெரியும்; இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன்

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளதுடன், செம்மணி மனிதப் புதைகுழியின் சூத்திரதாரிகளை அவருக்குத் தெரியும் என்பதால்

இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயத்துடன் தற்போதய நிலையை பார்க்கும்போது இன்று 400க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தின்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் ஒரு முக்கியமான சாட்சியான சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ இப்போது வாய் திறக்கத் தொடங்கியிருக்கின்றார்.

அவரது மனைவி, கணவரின் கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார். இந்த விடயம் உண்மையான சாட்சியமாக கருதப்படுகின்றது. ஏனென்றால், கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், இந்த சந்தேகத்தை வலுச் சேர்க்கும் வகையில் சோமரத்ன ராஜபக்‌ஷ பல விடயங்களை கூறிக்கொண்டிருக்கிறார். சில நிபத்தனைகளுடன் சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தும்போது சாட்சியாக பல உண்மைகளை கூறுவேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த 30 ஆண்டுகளாக புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல சாட்சியங்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சில சாட்சியங்களை வாய் திறக்காதவாறு அடைத்து வைத்திருக்கின்றார்கள். எனவே இந்த சோமரத்ன ராஜபக்‌ஷ என்பவரை நியாயமான விசாரணைக்கு உட்படுத்தும்போது கொலையாளிகள் பற்றியும் இச்சம்பவங்களின் பிரதான சூத்திரதாகள் யார் யார் என்பதையும் அறியமுடியும்.

அரசு நல்ல விடயங்களை செய்கின்றபோது குற்றவாளிகளை கைது செய்கின்றபோது, நீதியை தேடுகின்றபோது, உண்மையை தேடுகின்றபோது நாங்கள் அந்த விடயத்துக்கு ஆதரவளிப்போம்.

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தாங்கள் செய்த குற்றங்களை கண்டுபிடிக்கும்போது துடிக்கின்றார்கள்.

அந்த காலத்தில் எத்தனையோ அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படும்போது சட்டம் தெரிந்தவர் அதிகாரத்தில் அமைச்சராக இருந்தவர் ஏன் வாய் திறக்கவில்லை? இப்போது வாய் திறக்கிறார் என்றால் வடிகட்டிய இனவாதத்தை வெளிப்படுத்துகிறார்.

அறிவுஜீவிகளான பேராசிரியர் ரவீந்திரநாத், சிவராம், நடேசன், சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம், சுகிர்தராஜன், தம்பையா… இப்படி பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படி எல்லோரையும் அழித்துள்ளனர்.

ஆகவே இதனை சரியான முறையில் நீதியாக நியாயமான முறையில் விசாரணை செய்கின்ற போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார், செம்மணி படுகொலை செய்த அரச பயங்கரவாதிகள் யார் என்பதை கண்டறிய முடியும். சோமரத்ன ராஜபக்‌ஷ, ஆசாத் மௌலானா போன்றோரை பயன்படுத்தி விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும் எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button