இலங்கை

கிழக்கில் காணிகளை அரசு குறிவைக்கிறதா?; நீதிக்கான மையம் கேள்வி – ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டவாச்சியை மற்றும் கிழக்கு மக்களின் அடிப்டை உரிமையினை மீறும் செயலை இலங்கை நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோரப் பகுதி அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள இந்த விசேட பொறிமுறையானது, சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான நடவடிக்கை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை இந்த முடிவு அப்பட்டமாக மீறுவதாகத் தெரிவித்து, இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மிக அவசரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், இந்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாகக் கைவிடுமாறு அல்லது இடைநிறுத்துமாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

காணி ஆக்கிரமிப்புகளும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் பிரத்தியேகமான பிரச்சினைகள் அல்ல எனவும், தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு தேசியப் பிரச்சினையாகும் எனவும் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய மாகாணங்களை விடுத்து, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பல்லின சமூகமாக வாழும், யுத்தத்திற்குப் பின்னரான காணி இழப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மட்டும் இவ்வாறு அதிகாரம் வாய்ந்த விசேட குழுவினை நிறுவுவது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும்.

இன, மத, பிராந்திய பாகுபாடுகளின்றி சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் மிகத் தெளிவாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் , இந்த தனியொரு மாகாண பொறிமுறையானது அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது என சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

மேலும், காணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கவும் 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரசு நிலங்கள் சட்டம் Act No. 07 of 1979 அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என இலங்கையில் ஏற்கனவே போதுமான மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் காணப்படுகின்றன.

மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தற்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டே, பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸார் ஊடாகத் தீர்க்க முடியும் எனும் போது, புதிய குழுக்களை எதற்காக என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்து.

தற்போது இலங்கைக்குத் தேவைப்படுவது நாட்டிலுள்ள தற்போதைய சட்டங்களை ஒன்பது மாகாணங்களுக்கும் பாரபட்சமின்றி, சமமாக அமல்படுத்துவதற்கான அரசியல் விருப்பம் மட்டுமே ஆகும் என்றும் இலங்கை நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஜூன் 22 அன்று எடுக்கப்பட்ட இந்த அமைச்சரவை முடிவை உடனடியாக நிறுத்தி வைத்து, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொது மக்கள் ஆலோசனைகளை நடத்துமாறும், சட்டத்தை நாடு முழுவதற்கும் பொதுவானதாக சமத்துவத்தின் அடிப்படையில் அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இலங்கை நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button