முச்சந்தி

உயிரிழந்த மாணவி பற்றி அவதூறு; அமைச்சர் சரோஜாவைக் கண்டித்த மனோ

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார்.

மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொட்டாஞ்சேனை மாணவி குறித்து  (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன் எம்.பி-க்கு பதிலளித்த சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், அந்த மாணவி தொடர்பான விவரங்களை முன்வைத்ததுடன், பெற்றோர்களை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அவர்கள் அமைச்சுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் கூறினார்.
அதற்கு பதிலளித்த மனோ கணேசன் எம்.பி, அமைச்சு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டுமே தவிர, அவர்கள் உங்களிடம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று சாடினார். அத்துடன் மன நோயாளர் என்று கூறியமைக்காக அமைச்சர் சரோஜா மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டார்.

மனோ கணேசன் மேலும் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடைபெற வேண்டும். குறிப்பிட்ட மாணவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. அது உண்மை. இன்று அந்த மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் இடத்தில் பொலிஸ் நீர்த்தாரை பிரயோக வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கண்ணீர் புகை பிரயோக தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்யாதீர்கள். அது தவறு” என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இந்த சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பேசிய அமைச்சர் சரோஜா, மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button