முச்சந்தி

கனடா கனவால் கடன் சுமை; காதல் உறவு, மர்ம மரணம்!; அம்பாறை மருத்துவரின் சோக கதை

அம்பாறை பொது வைத்தியசாலையின் இயன்முறை மருத்துவ நிபுணராக பணியாற்றிய பெண் மருத்துவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த மருத்துவரின் காதலனே அவரது சடலத்தை காரில் கொண்டு வந்து தெல்தெனிய பகுதியில் கைவிட்டு தப்பிச் சென்றமை தெரியவந்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில், தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு மர்ம தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து சோதனையிட்டபோது, முன் இருக்கை நீட்டப்பட்ட நிலையில் கருப்பு நிறத் துணியால் மூடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்பதும், அவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது, அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நுவரெலியாவில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. மேலும், அங்குள்ள விடுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் சிசிடிவி காட்சிகளில், மயக்க நிலையில் இருந்த மருத்துவரை அவரது காதலன் தூக்கிச் செல்வது பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இரவு சுமார் 10.30 மணியளவில், சந்தேகநபர் பெண்ணைத் தூக்கிக்கொண்டு குடியிருப்பிலிருந்து வெளியேறி பின்னர் காரில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மருத்துவருக்கும் கண்டி கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தினேத் திஸாநாயக்க என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களாக காதல் தொடர்பு இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

கனடா செல்லும் திட்டத்திற்காக, வங்கி மற்றும் தனிநபர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்று தனது காதலனிடம் வழங்கியிருந்ததாகவும், வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னேறாததால் கடன் சுமை காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவர் தனது சகோதரரிடம் 3 நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என தெரிவித்திருந்ததுடன், மனஅழுத்தம் குறித்து வைத்தியசாலையின் மனநல மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், கடந்த 16ஆம் திகதி மாலை அவரது கைபேசி செயலிழந்ததை அடுத்து, சகோதரன் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார், சந்தேகநபருடன் தொடர்புடைய மற்றொரு பெண்ணுக்குச் சொந்தமானது என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மரணத்திற்கான காரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போது தலைமறைவாகியுள்ள தினேத் திஸாநாயக்கவை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button