பலதும் பத்தும்

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கரையோரப் பகுதிகளில் உள்ள பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

குறிப்பாக, சம்மாந்துறை-அம்பாறை, கல்முனை – அக்கரைப்பற்று ஆகிய பிரதான வீதிகளில், துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

சித்திரைப் புத்தாண்டு தினத்திலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.

இம்மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்க, வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பிற பழவகைகளை உண்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

வெளியிடங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வரும் பழவகைகளின் தரத்தைப் பரிசோதிக்க, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீனின் ஆலோசனைப்படி, சுகாதாரப் பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுதவிர, தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இவை 250 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை, சிறியது முதல் பெரியது வரையான அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

இப்பழவகை பெரும்பாலும் வெப்பமான காலங்களில் அதிகமாக அறுவடை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிப்பயிர் பெருமளவில் செய்யப்பட்டு, இவை பிற ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உடல் உஷ்ணத்தைப் போக்கும் வகையில், பொதுமக்கள் வர்த்தகப் பழம், இளநீர், தோடை, திராட்சை, வாழைப்பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்கும் விற்பனை நிலையங்களை அதிகம் நாடுவதைக் காண முடிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button