முச்சந்தி

பண்டாரநாயக்கவின் தனிச் சிங்கள சட்டமும் ஜேவிபியால் சிங்கள மயப்படும் தமிழர் தாயகமும்!!… நவீனன்

(சிறிலங்காவில் இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் அடிப்படைக் காரணம் என்றாலும், தற்போது ஆளும் அனுர அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது)

தமிழர் தாயகத்தில் உள்ள நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக தற்போதய அனுர அரசும் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.

1956 ம் ஆண்டில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள சட்டமே ஈழத்தில் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணி என்பதை இந்த அரசும் மறந்து போய்விட்டது போல தோன்றுகிறது.

இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் காரணம் என்றாலும், தற்போது ஆளும் இடதுசாரி அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

மோடிக்கு தமிழில் வரவேற்பு இல்லை:

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு ஏப்ரல் 4இல் வருகை தந்த வேளை தமிழ் வரவேற்பு பாதைகைகள் எங்குமே வைக்கப்பட இல்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ இலங்கைப் பயணத்திற்காக கொழும்பில் வந்தடைந்த போது, தலைநகர் முழுவதும் பெரிய விளம்பரப் பலகைகள் மற்றும் வரவேற்புப் பதாகைகள் காணப்பட்டன. ஆனால் குறிப்பாக எந்த தமிழ் மொழி உள்ளடக்க வரவேற்பு பதாகைகள் இருக்கவே இல்லை.

தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி, மற்றும் இந்திய பாரம்பரியத்தின் புதையல் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புகள் உட்பட, மோடி மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதான அபிமானத்தைப் பாராட்டிய போதிலும், இலங்கை அரசு அதன் செய்தியில் இந்த உணர்வுகளை முழுமையாக புறக்கணித்ததாகத் தோன்றியது.

அத்துடன் மத்திய கொழும்பில் கட்டப்பட்ட முக்கிய பதாகைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. சிறிலங்கா நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது.

இலங்கையில் இந்திய முதலீடு அதிகரித்து வரும் நிலையில் மோடியின் வருகை நிகழ்ந்துள்ளது. இதில் எரிசக்தித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும். அவற்றில் பல தமிழர் தாயகத்தில் மையப்படுத்திய நிலையில் உள்ளன.

ஆயினும் இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகமே என்பதனை புறக்கணிக்க இந்த அனுர அரசும் முயலுகின்றது.

1956 தனிச் சிங்களம் சட்டம் :

ஈழத்திலும் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணியும் மொழியே ஆகும். தனிச் சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழியாக (Official Language Act) அறிவிப்பின் பின்னரே தமிழ் மக்கள் கொடுமையாக அரசால் ஓடுக்கப்பட்டனர்.

தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. நீண்ட காலமாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

ஆயினும் 1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

நவம்பர் 1936 இல், ‘இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்’ மற்றும் ‘காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்’ போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன.

1944 இல் ஜே. ஆரின் இனவாதம்:

ஆனால் 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை மட்டுமே அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். இதனூடகவே இனவாதம் இலங்கையில் வேரூன்றியது. ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது.

1956இல் சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக் காரணமாயிற்று. இதன் பின்
தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டன.

தந்தை செல்வா தலைமையில் போராட்டங்கள்:

தனிச் சிங்கள சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச்சட்டத்தினை தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

ஆயினும் தமிழர் தரப்பில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.

இந்தப் போராட்டங்களையடுத்தே பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க திருத்தச் சட்டமொன்றை கொண்டு வந்ததுடன் தமிழ் மொழிக்கு சில விட்டுக்கொடுப்புகளை வேண்டா வெறுப்பாக ஏற்படுத்தினார். ஆயினும் இத்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பாகவே இருந்தன.

அன்று தொடங்கிய ஈழத் தமிழரின் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. எத்தனையோ இனப்படுகொலைகள் தமிழர் தாயகம் மீது நிகழ்த்தப்பட்டும், சர்வதேசம் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டே உள்ளது.

கிழக்கு பல்கலை கழத்தில் சிங்கள மயம்:

இத்தனை ஆண்டுகளாக தமிழர்கள் வஞ்சிக்கப்பட்ட போதும் இன்னமும் சிங்கள அரசு அதனது நிலையை மாற்றவில்லை என்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.

தற்போதைய கிழக்கு பல்கலைக்கழகத்தின் மேல் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை இந்த அரசால் நியமித்திருக்குகின்றார்கள்.

கண்துடைப்புக்காக வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும் 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எதிர் காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

இது போதாதென்று வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ் பல்கலை கழக அவலம்:

சிங்கள மயமாகி வரும் யாழ்ப்பாண பல்கலை கழக பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இது தவிர கிழக்கு மாகாணத்தை குறி வைத்திருக்கும் ஜேவிபி சிங்கள ஆளுநருக்கு மேலதிகமாக அதன் பிரதம செயலாளராகவும் சிங்கள அதிகாரியை நியமித்துள்ளது.

பொதுசேவையில் முழு சிங்கள மயம்:

அத்துடன் கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர் காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு முதலமைச்சருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் 13 ஆம் திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரிகளுக்கு இருக்க போவதில்லை.

அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் இல்லாத நிர்வாக அலகை ஜேவிபி உருவாக்கி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வழமை போல சிங்கள அதிகாரிகளே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அதிகாரி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்கமூவ சாந்தபோதி தேரர் உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்கள பிரதேச செயலாளர் ஒருவரே நியமிக்க பட இருக்கின்றார்.

அமைச்சு செயலாளர் சிங்கள மயம்:

வன்னி மாவட்டத்தில் ஜேவிபியில் போட்டியிட்டு இரு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிங்கள உறுப்பினரே ஒருங்கிணைப்பு குழு தலைவராக்கப்பட்டள்ளார்.

இவ் நியமனங்கள் ஊடக வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி ஊடக நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து பரவும் பரந்த குடியேற்றத்தினை செறிவாக்க முயற்சிக்கின்றார்கள் போல் உள்ளது.

இது போததென்று 27 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர் பட்டியலில் வெறும் இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்திலும் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை.

அதே போல அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உட்பட அரச கட்டமைப்புகளிலும் தமிழ் அதிகாரிகளுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை.

வெளிநாட்டு தூதுவராலயங்களின் சிங்கள மயம்:

50 நாடுகளில் இயங்கும் இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தலைமை பதவிகளுக்கும் வெளிநாட்டு சேவையியுள்ள எந்த தமிழ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வெளிநாட்டு சேவையுள்ள திறமையுள்ளோருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜேவிபி அறிவித்திருந்துள்ள நிலையில் அதற்கு மாறாக தங்கள் கூட்டாளிகளை நியமித்து வருகின்றது.

ஆனால் இதிலும் ஜேவிபி யில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை விசேடமாக திரு அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள ‘Clean Sri Lanka’ செயலணியிலும் தமிழ் அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிருக்கும் கூட தமிழ் பிரதிநித்துவம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் நியமனங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல . ஆனால் இலங்கையராக ஒன்றிணைவோம் என பேசும் ஜேவிபி காலத்தில் தான் இது மோசமான நிலையை எட்டியுள்ளது.

இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் திறமை அடிப்படையில் அரசியல் வேறுபாடு கடந்து Equality, Diversity, and Inclusion (EDI) தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் அடிப்படை விடயத்தில் தவறிழைத்து விட்டு அபிவிருத்தி மற்றும் ஊழல் பற்றி பேச முடியாது.

70 ஆண்டுகளாக தொடரும் இனவாதம்:

ஆனால் அபிவிருத்தி மற்றும் ஊழல் என வெறும் வாயால் பேசும் ஜேவிபி எல்லாவிதமான அசிங்கங்களையும் செய்கின்றது.

இங்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட அரச நிர்வாக கட்டமைப்பில் சிங்கள அதிகாரிகள் பணியாற்ற முடியாது என்று வாதிட முடியாது.

போட்டி தேர்வு /நேர்முகம் மூலம் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் யாரும் எங்கும் பணியாற்ற முடியும்.

ஆனால் குறித்த இன /சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பதும் திட்டமிட்ட ரீதியில் நிர்வாக கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்துவதும் அருவருக்க தக்க செயல்களாகும்.

கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் இந்த அருவருக்க தக்க பாரம்பரியத்தை ஜேவிபியும் வெளிப்படையாக தொடருகின்றது. ஆனால் வெறும் வாயில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி அலம்புகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button