தென்மராட்சி கூட்டத்திலும் அர்ச்சுனாவின் மட்டம் தட்டும் பேச்சினால் பலரும் விசனம்

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக கூட்டத்திற்கு தலைமை வகித்த இளங்குமரன் எம்.பியை மட்டம் தட்டிப் பேசினார் இதனால் அங்கு வந்திருந்த பலரும் விசனமடைந்தனர்.
நாட்டின் அபிவிருத்திக்கு 5000மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 1000மில்லியனை வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அதில் எவ்வளவு நிதியை தென்மராட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் பெற்றுத்தர முடியும் எனத் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய நிலையில் இறுதியாக ஐயாயிரத்திற்கு ஐந்தும் மூன்று பூச்சியங்களும் வரும் அதே நேரம் ஆயிரத்திற்கு ஒன்றும் மூன்று பூச்சியங்களும் வரும் இப்போதாவது நான் கேட்பது விளங்குதா? என வினவியிருந்தார்.
அதேநேரம் இளங்குமரன் எம்.பி அர்ச்சுனாவை நோக்கி, எனக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்ட வேண்டாம் எனக் கூறிய போது, குரங்கிற்கு தான் வாழைப்பழம் ஊட்ட முடியும் அடுத்த கூட்டத்திற்கு வாழைப் பழத்துடன் வருகை தருகிறேன் அதுவரை பொறுமை காக்கும் படி அர்ச்சுனா எம்.பி. கூறினார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் வைத்தியரே தவிர ‘மின் பட்டியல் பதிபவன்’ அல்ல எனவும் கூட்டத்தில் கருத்து வெளியிட்டதுடன்-
நான் அமைச்சரிடம் ஏதும் கேள்வி கேட்டால் அமைச்சர் என்னை டேய் என்று பேசுகிறார் என்றும் அர்ச்சுனா எம்.பி. தெரிவித்தார்.
அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூட்டத்திற்கு பொருத்தமற்ற விடயங்களை தொடர்ச்சியாக பேசி வந்தமையால் பொறுமை இழந்த தென்மராட்சியின் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் கூட்டத்தை பயனுள்ள விதத்தில் கொண்டு நடத்துமாறு கூட்டத்தில் எழுந்து அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
![]()