15 வருடங்களாக நடக்கும் வழக்கில் செல்வம் எம்.பியின் கடவுச்சீட்டை தடுத்துவைக்க உத்தரவு

“கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் எனக்குக் கட்டளை பிறப்பித்துள்ளது.”- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்குச் சென்று வந்த பின்னரே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முள்ளியவாய்க்காலில் நடந்த அனர்த்தங்களையும், இராணுவம் செய்த கொடூரமான செயற்பாடுகளையும் பொது வெளியில் நான் பேசியதாகவும், விடுதலைப்புலிகளுடன் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக நான் சதி செய்தேன் என்று கூறியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்திருந்தார்கள்.

வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் இது பற்றிய வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்றபோது நான் அதற்குச் சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை அந்தப் பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக நான் எனது சட்டத்தரணியுடன் நீதிமன்றம் சென்றிருந்தேன்.

அங்கு சென்று ஆஜராகியபோது 25 ஆயிரம ரூபாய் ஆட்பிணையும், எனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது. என்னோடு மரியசீலன் என்பவர் தொர்ச்சியாக இந்த வழக்கில் சமூகமளித்துக் கொண்டிருக்கின்றார். அவர் 8 வருடங்கள் சிறையில் இருந்தவர்.

கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்திச் செல்லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button