பலதும் பத்தும்

ஐந்து வெப்ப அலைகளால் வதங்கிய இங்கிலாந்து

இங்கிலாந்து தனது உணவுத் தேவைகளுக்காக, அதிலும் குறிப்பாகக் காலநிலை நெருக்கதியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நம்பியிருப்பதால், அது உணவு விலை அதிர்ச்சிகளுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு பிரிட்டனின் பெரும்பகுதி சாதனை அளவிலான ஐந்து வெப்ப அலைகளால் வதங்கியதுடன், வறட்சி மற்றும் காட்டுத்தீயையும் எதிர்கொண்டது. இந்த வெப்பமான, வறண்ட சூழ்நிலைகள் பயிர்களைப் சேதப்படுத்தியுள்ளதுடன் உள்நாட்டு உற்பத்தி விளைச்சலையும் குறைத்துள்ளன.

எப்படியிருப்பினும், மிகவும் பிரபலமான சில புதிய உணவுப் பொருட்களின் விநியோகத்திற்காக, காலநிலை அழுத்தத்தை இன்னும் அதிகமாக எதிர்கொள்ளும் நாடுகளை இங்கிலாந்து நம்பியுள்ளதாக ‘புட் ஃபவுண்டேஷன்’ (Food Foundation) தொண்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இங்கிலாந்து பொதுவாகத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான தானியங்கள், இறைச்சி, பால் மற்றும் முட்டைகளை உற்பத்தி செய்தாலும், இது பெரிய மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே மிகக் குறைந்த உணவு சுயிறைமை (Self-sufficiency) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

இதன் உணவில் சுமார் 40 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 80 சதவீதப் பழங்கள் மற்றும் 47 சதவீதக் காய்கறிகள் அடங்கும். ஐரோப்பாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதனால் பிரான்ஸ், ஜெர்மனி அல்லது ஸ்பெயினைக் காட்டிலும் இங்கிலாந்து இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது.

குறிப்பாக மத்திய தரைக்கடல், வட ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா முழுவதும் நெகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உயர் வெப்பநிலையானது குறைந்த விளைச்சல், தாவரங்களுக்கு வெப்ப அழுத்தம் மற்றும் தரம் குறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த அரசளுக்கிடையேயான குழு (IPCC) முன்னறிவித்துள்ளது.

உணவு விநியோகச் சங்கிலி அமைப்பான ‘கோல்ட் செயின் பெடரேஷன்’ (Cold Chain Federation) மற்றும் சிறந்த உணவு நிபுணர்கள், தீவிர காலநிலை, எரிபொருள் பற்றாக்குறை அல்லது சைபர் தாக்குதல்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கான உணவு விநியோகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகச் சமீபத்திய மாதங்களில் எச்சரித்ததைத் தொடர்ந்து ‘புட் ஃபவுண்டேஷன்’ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமான உணவை மலிவு விலையில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக உணவுக் கொள்கை மற்றும் வணிக நடைமுறைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இத்தொண்டு நிறுவனம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாறும் காலநிலைக்கு ஏற்ப பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று கோருகிறது.

“இங்கிலாந்தின் உள்நாட்டு உணவு உற்பத்திக்கும் உணவுமுறை இலக்குகளுக்கும் இடையே ஒரு முரண்பாடு” உள்ளதாகக் குறிப்பிடும் ‘புட் ஃபவுண்டேஷன்’, இங்கிலாந்துக்கு ஆரோக்கியமான முக்கிய உணவுகளை வழங்கும் முதல் 20 நாடுகளில் 18 நாடுகள் (90 சதவீதம்) காலநிலைச் சீரழிவுக்கு மிதமானது முதல் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளதாக தனது அறிக்கையில் கண்டறிந்துள்ளது.

இங்கிலாந்தில் அதிகம் வாங்கப்படும் ஒன்பது பழங்களில் ஐந்து பழங்களை உள்நாட்டிலேயே வளர்க்க முடியும். அவற்றுள் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் பேரிக்காய் ஆகியவை அடங்கும். இருப்பினும், அவற்றுள் நான்கு வகைகளுக்குத் தேவையான உள்நாட்டு நுகர்வில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே இங்கிலாந்து வளர்க்கிறது.

காய்கறிகளைப் பொறுத்தவரை, கேரட் மட்டுமே உயர் மட்ட சுயிறைமையை (94%) எட்டியுள்ளது. தக்காளி, காளான், குடைமிளகாய், வெள்ளரிக்காய், வெங்காயம், ப்ராக்கோலி மற்றும் பச்சை பீன்ஸ் உள்ளிட்ட பிரிட்டிஷ் நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமான காய்கறிகளை இங்கிலாந்து அதிகளவில் வளர்க்க முடியும் என்றாலும், அவற்றுள் சுமார் பாதியே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

‘புட் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிர்வாக இயக்குநரான அன்னா டெய்லர் (Anna Taylor) கூறுகையில்: “[காலநிலைச் சீரழிவின் தாக்கங்கள்] எதிர்காலத்தில் விலைகளை உயர்த்தி, பலருக்குச் சத்தான உணவுகள் கிடைக்காத அளவுக்கு விலகிச் செல்வதற்கான ஆபத்து உள்ளது. எனவே, இதைத் தடுக்க அரசாங்கம் இப்போதே நடவடிக்கை எடுப்பது முக்கியம்” என்றார்.

தோட்டக்கலை வணிகங்கள், குறிப்பாகக் கண்ணாடி வீடுகளை (Greenhouses) நம்பியிருப்பவர்கள், அண்டை ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக உள்ள உயர்ந்து வரும் எரிசக்திச் செலவுகளுடன் போராடி வருவதாகவும், இது சிலரை உற்பதியைக் குறைக்க நிர்ப்பந்தித்துள்ளதாகவும் சில காலமாகத் தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானியாவின் விலகல் (Brexit) சவால்களுக்குப் பிந்தைய மானியங்களில் மாற்றங்கள், மோசமான வானிலை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றுடன் வளர்ப்போர் எதிர்கொள்ளும் சவால்களில் எரிசக்திச் செலவுகளும் ஒன்றாகும்.

வோர்செஸ்டர்ஷயரில் ஆப்பிள் மற்றும் ஹாப்ஸ் பண்ணையை நடத்திவரும் மற்றும் பிரிட்டிஷ் ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவருமான அலி காப்பர் (Ali Capper), தனது உறுப்பினர்கள் மேலும் பல பழங்களை வளர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்: “அவ்வாறு செய்வதற்கு நல்ல அரசாங்கக் கொள்கை வழங்கக்கூடிய உறுதியளிப்பு அவர்களுக்குத் தேவையாகவுள்ளது. தொடர்ச்சியான மற்றும் மேம்பட்ட பருவகால தொழிலாளர்கள் திட்டம் மீதான உறுதிப்பாடு, உணவுக்கான நீர், சுறுசுறுப்பான திட்டமிடல் ஒழுங்குமுறை, போட்டி விலையிலான எரிசக்தி ஆகியவை அவசியமாகும். வளர்ப்போருக்கு நீண்ட கால ஒப்பந்தங்களும் லாபகரமான வருமானமும் போன்ற சந்தை உறுதிப்பாடும் தேவையாகவுள்ளது.”

உணவு உற்பத்தியாளர்கள் எதிர்வரும் தோட்டக்கலைத் துறை வளர்ச்சித் திட்டத்தில் தங்களது கவலைகளில் சிலவற்றிற்குத் தீர்வு காணுமாறு அரசாங்கத்தைக் கோரி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button