பலதும் பத்தும்

உடம்பில் மச்சம் ஏன் வருகிறது என்று தெரியுமா?

மச்சம் என்பது நமது உடலின் ஒரு இயற்கையான அடையாளம். சிலருக்கு முகத்தில் இருக்கும் மச்சம் அழகைக் கூட்டும், ஆனால் சிலருக்கு அதுவே தங்களது அழகைக் கெடுப்பதாகக் கவலை வரலாம்.

குறிப்பாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பெரிய அளவிலான அல்லது தேவையில்லாத இடங்களில் மச்சம் வரும்போது, அது பலரது தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.

நமது சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கும் செல்களுக்கு ‘மெலனோசைட்டுகள்’ என்று பெயர். இந்த செல்கள் சருமம் முழுவதும் பரவி இருக்காமல், உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றாகக் குவியும்போதுதான் அது மச்சமாக மாறுகிறது.

இது முக்கியமாக மரபணு காரணமாகவும், வெயிலில் அதிகமாகச் சுற்றுவதால் ஏற்படும் சூரியக் கதிர்களின் தாக்கத்தினாலும் ஏற்படுகிறது. பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் புதிய மச்சங்கள் தோன்றலாம்.

அழகியல் ரீதியாகப் பார்த்தால், உதட்டின் மேல் அல்லது கன்னத்தில் இருக்கும் சிறிய மச்சங்கள் ஒருவருக்கு தனித்துவமான அழகைத் தரும்.

ஆனால், மூக்கின் நுனி, கண்கள் அல்லது முகத்தின் நடுவே பெரிய அளவில் உப்பிக் கொண்டு வரும் மச்சங்கள் முகத்தின் ஒட்டுமொத்தப் பொலிவையும் கெடுப்பதாகப் பலர் கருதுகிறார்கள்.

மேக்கப் போடும்போது கூட இந்த மச்சங்களை மறைப்பது கடினமாக இருக்கும். இதனால், தங்களது அழகான தோற்றத்தை மீட்டெடுக்கப் பலர் மச்சங்களை நீக்க விரும்புகிறார்கள். ஆனால் அதை நாமே எடுக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.

அறுவை சிகிச்சை இல்லாமல், மேக்கப் மூலமே உங்களது அழகைக் கெடுக்கும் மச்சங்களை எளிதாக மறைக்க முடியும். மச்சம் கருப்பாக இருந்தால், முதலில் அதன் மேல் ஆரஞ்சு அல்லது பீச் நிற கலர் கரெக்டர் தடவ வேண்டும்.

அதன் மேல் உங்களது சரும நிறத்திற்குப் பொருத்தமான, அதிக கவரேஜ் தரும் கன்சீலரைப் பயன்படுத்தித் தடவினால் மச்சம் தற்காலிகமாக மறைந்து, முகம் பளிச்சென்று மாறும்.

வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மச்சங்களின் மேல் பூண்டு, சுண்ணாம்பு அல்லது ஆசிட் போன்றவற்றை வைப்பது சருமத்தை நிரந்தரமாகப் பாழாக்கி வடுக்களை ஏற்படுத்திவிடும்.

அழகிற்காக மச்சத்தை நீக்க நினைத்தால், ஒரு சிறந்த தோல் மருத்துவரை கட்டாயமாக அணுக வேண்டும். சிறிய மற்றும் தட்டையான மச்சங்களை லேசர் கதிர்கள் மூலம் தழும்புகள் இல்லாமல் எளிதாக நீக்கலாம்.

உப்பலாக இருக்கும் மச்சங்களை இந்த நவீன முறையில் தழும்பின்றி அகற்ற முடியும்.

அழகுக்காக மச்சத்தை நீக்குவதற்கு முன்பு, அது ஆரோக்கியமான மச்சம்தானா என்பதை உறுதிப்படுத்துவது மிக முக்கியம். மாற்றங்கள் இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.

மச்சத்தின் அளவு நாளுக்கு நாள் பெரிதாவது. மச்சத்தின் நிறம் திடீரென மாறுவது அல்லது அதன் ஓரங்கள் ஒழுங்கற்று இருப்பது. மச்சத்தில் அரிப்பு, ரத்தம் அல்லது நீர் வடிதல் இது போன்றவை தோன்றினால் உடனடியாக வைத்தியரை பார்ப்பது மிகவும் அவசியம்.

இவை சாதாரண மச்சமாக இல்லாது, சருமப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, விழிப்புணர்வுடன் செயல்பட்டு உங்களது அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button