கவிதைகள்

“தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

எண்ணித் துணிகவென இயம்பினார் வள்ளுவர்
எண்ணாமல் தொடங்குவார் இருக்கிறார் பலபேர்கள்
காரியம் முடிந்தபின் கவலையில் மூழ்குவார்
வள்ளுவரின் உட்கருத்தை மனமேற்றா விட்டவரே 
 
ஆரம்பம் என்பது அனைவர்க்கும் முக்கியமே
ஆரம்பம் கோணினால் அனைத்துமே குலைந்துவிடும்
ஆரம்ப வேளையிலே அலட்சியமாய் இருந்திட்டால்
அடிபதிக்கும் அத்தனையும் ஆடியே போய்விடுமே
 
வாழ்கையில் ஆயிரம் படிகள் உண்டு
தாவிக் குதித்தால் தடுக்கியே வீழுவோம்
படிகளைத் தாண்டிடப் பக்குவம் அவசியம்
பதட்டமாய் தாண்டுவார் தடக்கியே வீழுவார்
 
எப்படித் தாண்டலாம் எப்படி ஏறலாம்
என்பதை எண்ணியே தாண்டிடல் முக்கியம் 
வீழ்ந்து நொந்து வெதும்பிய பின்னால்
வெந்து நிற்பதில் நியாயந்தான் உண்டா
 
எண்ணித் துணிவது என்பது தத்துவம்
செய்வதைத் சீராய் செய்வதே முக்கியம் 
எண்ணிய முடிக்கும் திண்ணிய மனத்தாய் 
எண்ணிய முடித்தால் எல்லாம் சிறக்கும்
 
எண்ணித் துணிவதில் இலக்கே முக்கியம்
இலக்கை இழந்தால் எண்ணியது குழப்பமே
துணிவு என்பதில் கலக்கம் வேண்டாம்
தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும் ! 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
     மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
             மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button