இலங்கை

ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்

எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் பிணையில் வெளியில் உள்ளார்கள், பலர் வெகுவிரைவில் சிறை செல்வார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொள்ளவார்கள் என்று தெரியவில்லை என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய சாட்சிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது கவலைக்குரியது.

எயார் பஸ் கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவுக்கு சத்தியகடதாசி ஊடாக பலவிடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

எயார்பஸ் கொள்வனவு மோசடியில் தான் அப்போதைய ஜனாதிபதிக்கு தங்காலை கால்டன் இல்லத்தில் வைத்து இலஞ்ச தொகையை வழங்கியதாகவும்,பியங்கர ஜயரத்னவுக்கும் இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தற்போது முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கடந்த கால படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில் அதனுடன் தொடர்புடைய பலர் அச்சமடைந்துள்ளனர்.

எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியில் உள்ளார்கள். வெகுவிரைவில் சிறை செல்வார்கள்.

ராஜபக்ச குடும்பத்தின் சகலருக்கும் வழக்குகள் உள்ளன. அனைவரும் வரிசையாக வழக்கு விசாரணைகளுக்காக செல்கிறார்கள்” என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button