இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணையை வரவேற்கிறோம்; தமிழ் மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது – செல்வம் எம்.பி. வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதை வரவேற்பதாகவும், உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதையும் தொடர்ந்து விசாரணைகள் சூடுபிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மட்டுமன்றி, கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளையும் வெளிக்கொணரக் கூடிய வாய்ப்பை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.

ஒரு ஜனாதிபதியின் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பல மதங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். எனவே முழுமையான மற்றும் துரிதமான விசாரணை அவசியம் என அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிய அவர், விசாரணைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button